மேட்டுப்பாளையத்தில் யானைகள் முகாம் வேண்டாமே...! தமிழக விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்
மேட்டுப்பாளையத்தில் யானைகள் முகாம் வேண்டாமே...! தமிழக விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்
UPDATED : ஆக 28, 2026 04:56 PM
ADDED : ஆக 28, 2026 04:21 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நடக்கவுள்ள கோவில் யானைகள் முகாமை, வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக விவசாயிகள் சங்க, மேட்டுப்பாளையம், காரமடை பகுதி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம், வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே நடந்தது. விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்து பேசியதாவது:
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே கோவில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த, தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த காலங்களில் மேட்டுப்பாளையத்தில் யானைகள் முகாம் நடந்தபோது, யானைகளால் பயிர் மற்றும் உயிர் சேதமும், யானைகள் -- மனித மோதல்களும் நடந்துள்ளன. நெல்லித்துறை வனப்பகுதியில் இருந்த காட்டு யானைகள், பவானி ஆற்றை கடந்து, முகாம் நடந்த பகுதி அருகே உள்ள நெல்லிமலைக்கு இடம்பெயர்ந்தன. அதன் பின், நெல்லிமலை, காட்டு யானைகளின் வாழ்விடமாக மாறியது. இங்குள்ள காட்டு யானைகள் சுற்றுப்பகுதிகளில் உள்ள, விவசாய நிலங்களில் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்த வந்தன.
கடந்த ஐந்தாண்டுகளாக, மேட்டுப்பாளையத்தில் யானை முகாம் நடைபெறவில்லை. அதனால், நெல்லிமலைப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் குறைந்துள்ளன. தற்போது தமிழக அரசு, கோவில் யானைகள் முகாமை மீண்டும் மேட்டுப்பாளையத்தில் நடத்த முடிவு செய்துள்ளது. இப்பகுதியில் கோவில் யானைகள் முகாம் நடந்தால், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரிக்கும்; யானைகள் -- மனித மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகளவில் விவசாய பயிர்கள் சேதம் அடையவும் வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு, மேட்டுப்பாளையத்தில் யானைகள் முகாமை நடத்துவதை தவிர்த்து, வேறிடத்தில் நடத்த ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
யானைகள் முகாம் நடைபெறும் இடம் அருகே உள்ள, தேக்கம்பட்டி, கெண்டேபாளையம், டி.ஜி.புதுார், கிட்டம்பாளையம், தாசம்பாளையம், குரும்பனுார், மங்களக்கரைப்புதுார், மருதுார், ராமேகவுண்டன்புதுார், ஓடந்துறை, காரமடை ஆகிய பகுதிகளில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டம் நடத்தி, யானைகள் முகாமை மேட்டுப்பாளையத்தில் நடத்தாமல், வேறிடத்தில் நடத்த தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்புவது, யானை முகாம் குறித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் யானை முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடிகள் கட்டுவது.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாசம்பாளையம் ராஜேந்திரன், சின்னராஜ், நாராயணன், தனராஜ், பழனிசாமி, வெள்ளிங்கிரி, பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
