/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூங்கா இடத்தில் வேலி அமைக்க எதிர்ப்பு
/
பூங்கா இடத்தில் வேலி அமைக்க எதிர்ப்பு
ADDED : ஜன 20, 2024 02:33 AM

போத்தனுார்;போத்தனுார் அருகே பூங்கா இடத்தில் வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
போத்தனுாரிலிருந்து நஞ்சுண்டாபுரம் செல்லும் வழியில் மாநகராட்சியின், 85வது வார்டில் அம்மன் நகர் உள்ளது. இதன் பிரதான சாலையின் இறுதியில், ராஜவாய்க்காலை ஒட்டி சுமார், 30.5 சென்ட் ரிசர்வ் சைட் பூங்கா கட்டுவதற்காக விடப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், ராஜவாய்க்காலை அடுத்துள்ள விவசாய நிலத்தில், வீட்டு மனை பிரித்தவர்கள், இவ்விடத்தை அணுகுசாலையாக குறிப்பிட்டு, இடம் விற்க அனுமதி பெற்றுள்ளனர். இதற்கு அம்மன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. சென்னை ஐகோர்ட்டில், இடம் விற்போர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதையடுத்து நேற்று வார்டு உதவி இன்ஜி., சரண்யா அவ்விடத்தில் வேலி அமைக்க வந்தார்.
நிலம் விற்போர் அவரை தடுத்து, வேலி அமைக்க வந்தவர்களை மிரட்டி அங்கிருந்து போக செய்தனர். போத்தனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோருடன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவர் சாலையில் படுத்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். அங்கிருந்த அவரது தரப்பினர் சமாதானம் செய்ததால் சாலையிலிருந்து எழுந்தார்.
இறுதியில், மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் முறையிடுவதாகவும், அதுவரை வழியை அடைக்கவேண்டாம் எனவும், உதவி நகரமைப்பு அலுவலரிடம் வீட்டு மனை விற்போர், குடியிருப்போர் கூறினர். இதையடுத்து, வழிக்கான இடத்தை தவிர்த்து காலியிடத்தில், மாநகராட்சியினர் வேலி அமைத்தனர்.