ADDED : ஜூலை 17, 2025 09:40 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அரசம்பாளையம் செல்லும் வழித்தடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கிணத்துக்கடவு, அரசம்பாளையம் ரோட்டில் தினமும் அதிகப்படியான வாகன போக்குவரத்து உள்ளது. இவ்வழியில் ரயில்வே கேட் அமைந்துள்ளதால், ரயில் வரும் நேரத்தில் கேட் அடைக்கப்படுவதால், மக்கள் காத்திருந்து செல்கின்றனர்.
நாள் ஒன்றுக்கு, ஐந்து முறையும் வார இறுதி நாட்களில், சிறப்பு ரயில்கள் வரும் போது கூடுதலாக கேட் அடைக்கப்படுவதால், மருத்துவம் மற்றும் பிற அவசர தேவைகளுக்கு செல்லும் மக்கள் பாதிக்கின்றனர்.
போக்குவரத்து குறைவாக உள்ள, கோடங்கிபாளையம் மற்றும் நல்லட்டிபாளையம் செல்லும் வழித்தடத்தில் ரயில்வே கேட்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று அரசம்பாளையம் ரோட்டில் மேம்பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரயில்வே கேட்டில் இருந்து அரசம்பாளையம் வரை ரோட்டையும் அகலப்படுத்த வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
