/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் மழை துவக்கம்; காலநிலை மையம் தகவல்
/
மீண்டும் மழை துவக்கம்; காலநிலை மையம் தகவல்
ADDED : ஜூன் 09, 2025 09:44 PM
பொள்ளாச்சி; மழை குறைந்துள்ளதால், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், அடுத்த சில தினங்களில் குறையும் எனவும், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே, துவங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கடந்த மாதம் தெரிவித்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய பகுதிகளில், மழை அதிகளவில் பெய்தது.
கடந்த மாதம் 31ம் தேதிக்குப் பின், மழை பொழிவு இல்லை. ஆனால், வெயில் அதிகரித்துள்ளது.
மழைகாலத்தில் வெயில் அடிப்பதன் காரணம் குறித்து, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி கூறுகையில், ''தற்போது மழை குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வெயில் அதிகரித்துள்ளது போல் தோன்றுகிறது. 36 - 37 டிகிரி செல்சியஸ் வெயில் தான் உள்ளது. பிற பகுதிகளில்தான் வெயில் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மெல்ல பருவமழைக்கான காற்று அடிக்கத் துவங்கியுள்ளது. இதனால், வெயிலின் தாக்கம் இனி இருக்காது. அடுத்த ஓரிரு நாட்களில் மழை இருக்கும். அப்போது வெப்பம் குறைந்து விடும்,'' என்றார்.