ADDED : மார் 30, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, ஜாக் சார்பில் ரமலான் முன்னிட்டு நடந்த, சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பெருநாளில் ஒன்றான ரமலான், நேற்று ஜாக் பிரிவினரால் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நேற்று காலை ஆத்துபாலம் அடுத்து சுண்ணாம்பு காளவாய் அருகேயுள்ள, ஆயிஷா மஹால் வளாகத்தில் சிறப்பு தொழுகை நடந்தது.
காலை, 7:30 முதல், 7:45 மணி வரை தொழுகையும், தொடர்ந்து மார்க்கம் குறித்த சொற்பொழிவும் நடந்தது. மவுலவி அப்துர் ரஸ்ஸாக் சொற்பொழிவாற்றினார்.
ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். தொழுகைக்குப் பின் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவியும், கை குலுக்கியும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
குனியமுத்தூர் சரக உதவி கமிஷனர் அஜய் தங்கம் மேற்பார்வையில், 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.