ADDED : செப் 30, 2024 05:28 AM
குளறுபடியால பசங்க மனசு பாதிக்கும்
திருப்பூர் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் கல்வித்துறை பாரபட்சம் காட்டுவதாக ஆசிரியர்கள் கடுப்பில் உள்ளனர். இதுபற்றி ஆசிரியர்கள் சிலர் கூறியதில் இருந்து...
போட்டித்திறன்களை மேம்படுத்துங்க, தனித்திறன்களை ஊக்குவிக்கணும்னு சொல்றாங்க. அப்படி தயாராகும் மாணவர்கள பின்னுக்கு தள்ளுற மாதிரி தான், திருப்பூர் மாவட்டத்துல நடக்குது.
போட்டிகளுக்கு குழந்தைகள தயார் பண்ணுங்கனு கல்வித்துறையில 'ஆர்டர்' போடுறாங்க. குழந்தைங்க போட்டிக்கு ரெடியானதும், 'டிவிஸ்ட்' வைக்கறாங்க.ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு பிரிவுனு சொன்னாங்க. வட்டார அளவிலான போட்டி எல்லாம் அப்படித்தான் நடந்தது.
ஆனா, மாவட்ட அளவில வரும்போது, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரைக்கும், ஒரே பிரிவா வைச்சு, போட்டிபோட சொல்றாங்க. இது எந்த வகையில நியாயம்னு தெரியல. சரி, அப்படியே போட்டி நடத்தினாலும், சின்ன வகுப்பு குழந்தைகள ஊக்குவிச்சு பரிசு வழங்க மாட்டீங்கறாங்க. யாருக்கு பரிசு கொடுக்கணும்னு ஏற்கனவே முடிவு பண்ணி வச்சுகிட்டு, போட்டி நடத்துறாங்க.
இப்படி பள்ளிகளுக்கிடையே பாரபட்சம் காட்டி, போட்டி நடத்தி குளறுபடி பண்ணுறாங்க. இத எங்க போய் சொல்றதுனு தெரியல. நம்ம மாவட்ட கல்வித்துறைக்கு இதெல்லாம் தெரியாதா. இப்படி பண்ணிணாங்கனா, பசங்க மனசு தான் பாதிக்கும், என்றனர்.
என்ன புகாருனு கேட்கவே ஒரு மாசமாகுது!
சோமவாரப்பட்டி பஸ் ஸ்டாப் மரத்தடியில், விவசாயிகள் சுவாரசியமாக, ஒன்றிய அதிகாரிகளை பேச்சில் வறுத்தெடுத்து கொண்டிருந்தனர். அப்படி என்ன பிரச்னைனு காது கொடுத்து கேட்டேன்.
நம்மூருல இருந்து, அம்மாபட்டி போற ரோட்டுல பார்த்துதான் போகணும். ஏம்பா, ரொம்ப வருஷம் கழிச்சு சாக்கடை கட்டுறாங்க. அத சொல்றயா என்றார் ஒருவர்.
அதுக்கு மற்றவர், 'அது இல்லப்பா, இது வேற விஷயம். அம்மாபட்டி ரோட்டுல, 15வது நிதிக்குழு மானியத்துல, பெரிய டேங்க் கட்டுனாங்க. தண்ணீ விட்டு கொஞ்ச நாள்ல, டேங்க், மேல விரிசல் விட்டுருச்சு; கேட் வால்வ் இருக்கற இடத்துக்கும் போக முடியாத அளவுக்கு அசுத்தமாயிக்கு.
பயன்பாட்டுக்கு வந்து கொஞ்ச நாளிலேயே இப்படி ஆயிருச்சுன்னு, யூனியன் ஆபிஸ் அதிகாரிங்கிட்ட புகார் சொன்னோம். ஒரு நடவடிக்கையும் எடுக்கல.
அப்புறம், 'முதல்வரின் முகவரி' இணையதளத்துல புகார் பதிவு செஞ்சோம். உடனடி நடவடிக்கை இருக்கும் எதிர்பார்த்திருந்தோம். ஆனா, அந்த புகாருக்கும், ரொம்ப பொறுமையா ஒரு மாசம் கழிச்சு, யூனியன் ஆபிசுல இருந்து, போன் பண்ணி புகார்தாரர்கிட்ட என்ன விஷயம்னு கேட்டுருக்காங்க.
இதுக்கே ஒரு மாசமாச்சுன்னா, நடவடிக்கை எடுக்க எத்தனை மாசமாகுன்னு தெரியல. அவசர நடவடிக்கைக்கு புகார் பண்ணாலும், இப்படித்தான் நடவடிக்கை எடுப்பாங்க போல. படத்துல சொல்ற மாதிரி, இதுதானா சார் உங்க 'டக்'கு அப்படீனு இளந்தளிருக கிண்டல் பண்ணுறாங்கனு, உரையாடல முடிச்சுட்டாங்க.
ஸ்டாம்ப் பேப்பருக்கு கூடுதல் கட்டணம்
பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்துல, நண்பருடன் நின்று பேசிக்கொண்டு இருந்தேன். அப்ப, சப் - ரிஜிஸ்டர் அலுவலகத்தில் வெளியே காத்திருந்தவங்க, ஸ்டாம்ப் பேப்பர் பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க. ஏதாவது முக்கியமான பிரச்னையா இருக்கும்னு அவங்க பேச்சை கவனித்தேன்.
சப் - ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு பத்திரபதிவுக்கு நெறய பேரு வர்றாங்க. ஆனா, ஸ்டாம்ப் பேப்பர் வெளியே தான் வாங்கணும். இடம் வாங்கறவங்க, விற்கறவங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து, நாலு ஸ்டாம்ப் பேப்பர் வேணும். அதுக்கு, அதிக பணம் கேட்கறாங்க. 100 ரூபா ஸ்டாம்ப் பேப்பர் ரெண்டு வாங்கினா, 60 ரூபா அதிகமா கொடுக்க வேண்டிருக்கு.
இந்த பிரச்னைய தீர்க்கத்தான், 'இ - ஸ்டாம்பிங்' முறை கொண்டு வந்தாங்க. ஆனா, அதுவும் முறையா செயல்படுத்தறதில்ல. இதனால, கூடுதல் கட்டணம் செலுத்தி தான் ஸ்டாம்ப் பேப்பர் வாங்க வேண்டியிருக்கு. அரசாங்கம் மக்களுக்காக ஏதாவது திட்டம் கொண்டு வந்தாலும், அதை செயல்படுத்த அதிகாரிக யாரும் அக்கறை காட்டுறதில்ல.
ஸ்டாம்ப் பேப்பர் மட்டுமில்லாம, ஒவ்வொரு ரிஜிஸ்ட்ரேஷனுக்கும் பர்சன்டேஜ் கணக்கு போட்டு, அதிகாரிக லஞ்சம் வாங்கறாங்க. இப்படி இருந்தா, லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கவே முடியாதுங்கனு, அவங்க பேசிக்கிட்டாங்க.
பஸ் ஸ்டாண்ட் செல்லாத பஸ்கள்
பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி டீக்கடையில், முதியவர் இருவர் நெகமம் பஸ் ஸ்டாண்ட் பிரச்னை பற்றி, சப்-கலெக்டரிடம் புகார் கொடுக்க வேண்டும் என, பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு, என்ன பிரச்னைனு கேட்டேன்.
பொள்ளாச்சி - திருப்பூர் ரூட்டுல, அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்குதுங்க. பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுல இருந்து, தினமும், 171 'டிரிப்' திருப்பூருக்கு பஸ் புறப்படுது. ஆனா, பெரும்பாலான டிரைவர்கள் நெகமம் புது பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்சை ஓட்டுறதில்ல.
நெகமத்துல நெடுஞ்சாலைய ஒட்டிய இருக்கற பழைய பஸ் ஸ்டாண்டுல மட்டும் நிறுத்தி, பேசஞ்சரை இறக்கி விட்டுட்டு, திருப்பூருக்கு பஸ்களை இயக்குறாங்க.
இதேபோல, திருப்பூரில் இருந்து பொள்ளாச்சிக்கு வர்ற பஸ்களும், நெகமம் புது பஸ் ஸ்டாண்டுக்கு போகறதில்ல. ராத்திரி நேரத்துல, பொம்பளங்க, கொழந்தைக, வயசானவங்க யாரா இருந்தாலும், ரோட்டிலேயே இறக்கி விடுறாங்க. பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்கு வரணும், அப்பதான், வேற பஸ் பிடிச்சு ஊருக்கு போக முடியும். இதுக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிக நடவடிக்கை எடுக்கணும், என, பிரச்னைய விளக்கினர்.
மண்ணும், மலையும் மாயமாகுது!
உடுமலை, பூலாங்கிணர் முக்கோணம் அருகே, பஸ் ஸ்டாப்பில், நண்பரை சந்தித்த போது, மண் திருட்டு அமோகமா நடக்குது, இத தடுக்கவே முடியாதா என, வேதனையோடு கேள்வி எழுப்பினார். என்ன விஷயம்னு விசாரித்தேன்.
பூலாங்கிணருல, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு குட்டை இருக்கு. அதுல மண் எடுக்க, விவசாயிகள் பெயரில் கடந்த மாதம் அனுமதி வாங்கியிருந்தாங்க. அனுமதி காலம் காலாவதியான பிறகும், தொடர்ந்து வண்டல் மண் என்ற பெயரில், கிராவல் மண்ணை அள்ளி லோடு லோடா கடத்துறாங்க.
இது குறித்து, விவசாயிகள், வருவாய்த்துறை, போலீசாருக்கு தகவல் கொடுத்தும், நேரடி ஆய்வு செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கல.
இதே மாதிரி, மேற்கு தொடர்ச்சிமலையடிவாரத்துல, தும்பலப்பட்டி கரடு பகுதிகளில், எந்த அனுமதியும் இல்லாம, சட்ட விரோதமாக ஆளும்கட்சியை சேர்ந்த மண் மாபியா கும்பல், லோடு லோடா மண் திருடுறாங்க.
விவசாயிகள் புகார் கொடுத்தாலும், அதிகாரிகளுக்கு 'மாமூல்' தவறாமல் போகறதால, எந்த நடவடிக்கையும் எடுக்கறதில்லை. இப்படியே போச்சுனா, மண்ணும் இருக்காது, மலையும் இருக்காது. இயற்கைய அழிச்சுட்டு என்ன பண்ணப்போறாங்கனு தெரியல, என்றார்.

