ADDED : டிச 29, 2024 11:44 PM
காசு, பணம், துட்டு, மணி... மணி!
மடத்துக்குளத்துல நண்பரை சந்திக்க, நெடுஞ்சாலைத்துறை பிரிவு அலுவலகத்துல நின்றேன். அங்கு பணியாற்றவங்க, 'என்னமோ நடக்குது, நாம தப்புவமா,' என பேசிக்கொண்டிருந்தனர். அவங்க பேச்சை கவனித்தேன்.
பொள்ளாச்சி - தாராபுரம் - கரூர் ரோட்டுல 'ஜங்சன்' மேம்பாடு, அங்கு நடவு செய்த செடிகளுக்கு நீர் ஊற்றியதுனு, ஏழு லட்சம் ரூபாய, எந்த வேலையும் செய்யாமலேயே, பணம் மட்டுமே எடுத்துட்டாரு.
அதே மாதிரி, சாலைய அகலப்படுத்த அகற்றப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்கறதாவும், சாலையோரத்துல பொக்லைன் கொண்டு புதர் அகற்றி சுத்தம் செய்ததாகவும், பல கணக்கு எழுதி, பணத்த எடுத்துட்டாரு.
ரோடுகள்ல இருக்கற குழிகள சரி செய்ய 'பேட்ச் ஒர்க்' செய்யறப்ப, அந்த இடத்தை ஜி.பி.எஸ்., லொக்கேசன், போட்டோ எடுத்து, ஆவணங்கள் இருந்தால் மட்டுமே, பில் தொகை வழங்கணும். ஆனா, எந்த ஆவணமும் இல்லாம, பெரும் தொகை முறைகேடு நடந்திருக்கு.
ரோடு, பாலம் பணிகள, டெண்டர் விட்டாலும் பினாமி பேரு அவரே எடுத்து செய்து, பல லட்சம் ரூபாய அபேஸ் பண்ணிட்டாரு. தற்காலிக பணி அடிப்படையில, தொழில் நுட்ப பணியாளர்கள நியமிச்சதா சொல்லி, அவங்க பேருலயும் முறைகேடு பண்ணுறாரு. இப்படியே போச்சுனா, ஏதாவது சிக்கல் வந்தா அவரு நம்மல சிக்க வச்சிருவாருனு, பேசிக்கிட்டாங்க.
மடத்துக்குளம் நண்பர் மகேந்திரன் வந்ததும், சுவாரஸ்ய தகவலுடன் நாமும் அங்கிருந்து கிளம்பினோம்.
புகழ் பாடவா வந்தாரு அமைச்சரு!
பொள்ளாச்சியில் நடக்கும், 'பொள்ளாச்சி திருவிழா' நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அப்போது, ெஹலிகாப்டரில் பறக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்க அமைச்சர் ராஜேந்திரன் வந்திருந்தார்.
அவர், நம்ம ஊருக்கு ஏதாவது சொல்லுவாரு ஆவலோடு மக்கள் காத்திருந்தாங்க. பேச துவங்கிய அவரு, எல்லாரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில என்ன இருக்குதுன்னு சொன்னார். அப்பறம், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் செந்தில்பாலாஜி புகழ் பாட துவங்கினார்.
இதகவனிச்ச பொதுஜனங்க, 'என்னப்பா, சுற்றுலாத்துறை அமைச்சர், நம்ம ஊரு சுற்றுலா பத்தி ஏதாவது சொல்வாரு; பொள்ளாச்சிய மேம்படுத்த திட்டம் கொண்டு வருவாருனு நினைச்சா, அப்படி எதுவுமே பேசாம, துதி பாடும் வகையில பேசுறாரு. ஆர்வமாக வந்தா நம்மல ஏமாத்திட்டாரேனு,' புலம்ப துவங்கிட்டாங்க.
சரி, பேட்டியில ஏதாவது சொல்வாரு பார்த்தா, 'எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம, நான் பேசினத மட்டும் போடுங்க போதும்னு,' கும்பிடு போட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டாரு.
அமைச்சர் ஏதாவது ஏடாகூடமாக பேசிவிடுவாருன்னு, தலைமை சொல்லியிருக்கும் போல; விழாவுக்கு வந்ததுக்காக ஏதாவது பேசிட்டு, அவங்கள புகழ்ந்து பேசிட்டு போறாருனு, மக்கள் அங்கேயே கமென்ட் அடித்தனர்.
போலீஸ் நடவடிக்கை தொடருமா?
தாராபுரம் ரோட்டுல, நண்பர்களுடன் நடந்து சென்ற போது, கடும் துர்நாற்றமா இருந்துச்சு. ஏன் இப்படி இருக்குனு, அங்கிருந்த விவசாயிக கிட்ட கேட்டேன். அவங்க சொன்னதில் இருந்து...
கேரளாவுல இருந்து வர்றவாகனங்க, தாராபுரம் ரோடு வழியா நிறைய போகுது. அந்த வாகனத்துல, கேரளாவுல இருந்து கொண்டு வர்ற கோழி இறைச்சி உள்ளிட்ட கழிவு மூட்டையை ரோட்டோரத்துல வீசி எறியறாங்க.
மாநில எல்லையில செக்போஸ்ட் அமைத்து போலீசார் காவல் காக்கறாங்க. அதுமட்டுமில்லாம ரோந்து போலீசார் சுத்திட்டு இருக்காங்க. இவங்கெல்லாம், 'மாமூல்' வேலைய மட்டும் பார்த்துட்டு இருக்காங்க. கேரளாவுல இருந்து கழிவு கொண்டு வர்றத கண்காணிக்கறதும் இல்ல, தடுக்கறதும் இல்ல. இதனால, எந்த பயமும் இல்லாம, ரோட்டோரத்துல கழிவ கொட்டிட்டு போறாங்க; கடும் துர்நாற்றம் வீசுது.
கழிவு கொட்டுற வாகனத்த விவசாயிக, பொதுமக்கள் பிடிச்சு கொடுத்தா மட்டும், வேற வழியில்லாம போலீசார் 'கேஸ்' போடுறாங்க.
நெல்லையில மருத்துவ கழிவு கொட்டிய சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததால, இப்ப, பல இடத்துல, போலீசார் அலர்ட்டாகி கண்காணிக்கறாங்க. குடிமங்கலம், பெதப்பம்பட்டி உள்ளிட்ட இடங்கள்ல, 'மாமூல்' வேலையோடு, கேரளா வாகனங்கள சோதனை செய்யுறாங்க. இந்த நடவடிக்கை தொடர்ந்தா நல்லா இருக்கும்னு, அந்த விவசாயி சொன்னாரு.
சத்தியத்துக்கு கட்டுப்பட்டு பஸ் ஓடுது !
வால்பாறை பஸ் ஸ்டாண்ட்டுல, ரிட்டயர்டு ஆன டிரைவரை சந்தித்தேன். 'இங்க ஓடுற பஸ்கள் எல்லாம் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு ஓடுதுனு,' பேச ஆரம்பித்தார்.
வால்பாறை கிளை அரசு போக்குவரத்துக்கழகம், 38 ரூட்ல பஸ் இயக்குது. பெரும்பாலான பஸ்க காலாவதியான நிலையில ஓடுது. மலை மேல தனியார் பஸ் இயக்க அனுமதி இல்லாததால, வேற வழியில்லாம மக்கள் அரசு பஸ்சை நம்பி போறாங்க.
இன்னும் சொல்லப்போனா, கேரள மன்னார்க்காடு, கோவை, பொள்ளாச்சிக்கு இயக்கற பஸ்கள் கூட பழசா தான் இருக்கு. இதனால, பயணியரோட பாதுகாப்பு கேள்விக்குறியா இருக்கு.
பழைய 'டப்பா' பஸ்கள 'மேக்கப்' செய்து, மீண்டும் ரூட்டுல இயக்கறாங்க. பஸ் மெயின்டென்னஸ் ஒர்க் எதுவுமே சரியா நடக்கறதில்ல. டிரைவர்க புகார் புத்தகத்துல எழுதி வச்சாலும், அதிகாரிக கண்டுக்கறதில்ல. இதனால, பாதி வழியில பஸ் பழுதாகி நிக்கிறதும், பயணியர் வாக்குவாதம் பண்றதும் வாடிக்கையாயிருச்சு. இத எதிர்த்து கேட்டா, அந்த டிரைவருக்கு 'ஆப்பு' வெக்கறாங்க. கடவுள் கருணையாலும், டிரைவர்களின் சாமர்த்தியத்தாலும், சத்தியத்துக்கு கட்டுப்பட்டு, அரசு பஸ்கள் விபத்தில்லாம ஓடுதுனு, ஆதங்கப்பட்டாரு.
தேர்தல் வரட்டும் பாத்துக்கறோம்!
உடுமலை ஒன்றிய அலுவலகத்துக்கு செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த கணக்கம்பாளையம் கிராம மக்கள், 'நம்ம ஊருக்கு மட்டும் என்ன சாபக்கேடுனு தெரியலைனு' புலம்பிட்டு இருந்தாங்க. என்ன நடந்ததுனு விசாரித்தேன்.
கிராம உள்ளாட்சி பிரதிநிதிகளோட பதவிக்காலம் முடியப்போகுது. பதவிக்காலத்துல ஊருக்கு பேர் சொல்லற மாதிரி எதாவது செய்யணும்னு, பதவில இருக்கறவங்க தீவிரமா இருக்காங்க. ஆனா, எங்க ஊருல நிலைமை தலைகீழா இருக்குதுங்க.
ஊரு முழுக்க குப்பையா இருக்கு, அதக்கூட தினமும் முறையாக அகற்ற நடவடிக்கை இல்ல. நாய் தொல்லை அதிகமா இருக்கு. ஊராட்சில புகார் கொடுத்தாலும் கண்டுக்க மாட்டீங்கறாங்க. ஊருக்குள்ள இன்னும், பாதி பகுதியில ரோடு போடல. குழந்தைகங்க படிக்க அங்கன்வாடில மழை தண்ணீ தேங்கி ஒருவாரம் இருந்தாலும் அத அப்புறப்படுத்தாம அலட்சியம் காட்டுறாங்க.
இதையெல்லாம் விட குடிநீர் சரியா கிடைக்கணும்னு மக்கள் போராட்டம் நடத்தாத குறையா கேட்டும் ஒன்னும் நடக்கல. எங்க ஊராட்சி தலைமை, இப்படி எந்த பிரச்னையையும் காது கொடுத்து கேட்க மாட்டீங்குது. பதவிக்காலம் முடிய போகுது, அடுத்த தேர்தல் வர்ற வரைக்கும் அவங்க கண்ணுக்கு நாங்க தெரியமாட்டோம். தேர்தல் வரட்டும் பாத்துக்கலாம்னு நாங்களும் ஒரு முடிவுல இருக்கோம்னு, சொன்னாங்க.
அரசு நிலத்தை அபேஸ் பண்ணிட்டாங்க!
பொள்ளாச்சி தாலுகா ஆபீசில் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். 'அரசு புறம்போக்கு நிலத்தை அபேஸ் பண்ண பாக்குறாங்கனு,' நம்ம செய்திக்கு தீனி போட்டார். அவர் கூறியதில் இருந்து...
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துல, அரசாங்க உத்தரவுப்படி, தகுதியான நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து இருக்கோம். ஏற்கனவே வீட்டு மனை பட்டா வழங்கி, கிராம கணக்குல திருத்தம் செய்யாம உள்ளவர்களுக்கும், கணக்கு திருத்தம் செய்து வழங்கவும், ஆதிதிராவிடர் நலம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்புகளுக்கு வழங்கப்பட்ட பட்டாகளுக்கும் இ--பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம்.
நத்தம் புறம்போக்கு, அனாதை இனம், கல்லாங்குத்து, வண்டிப்பாதை உள்ளிட்ட இடங்கள தேர்வு செய்ய ஆவணங்களை சரிபார்த்து, ஆய்வு நடத்திட்டு இருக்கோம். பல இடங்கள்ல, அரசியல் கட்சியினர், வசதி படைத்தவர்கள் என, பலரும், நத்தம் புறப்போக்கு நிலத்தை பல ஏக்கர் பரப்பில் ஆக்கிரமித்து வச்சிருக்கறது தெரியவந்துள்ளது.
அந்த இடங்கள மீட்க முற்பட்டால், ஆளுங்கட்சியினரே மிரட்டுறாங்க. இடத்தை மீட்க வேண்டாம்னு, மேல்மட்ட அளவில் உள்ள வி.ஐ.பி.,க்கள் சிபாரிசு பண்ணுறாங்க. பணி செய்ய விடாமல் தடுக்கறாங்க. அங்க சுத்தி, இங்க சுத்தி, அரசு புறம்போக்கு நிலங்கள அபேஸ் பண்ணிட்டாங்கனு, புலம்பினார்.