ADDED : ஏப் 14, 2025 05:33 AM
ஆளுங்கட்சி அட்ராசிட்டி தாங்கலபழைய இரும்ப கூட விட்டு வைக்கல
பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அங்கு வந்த நண்பர்கள், 'பழைய இரும்ப கூட விட்டு வைக்க மாட்டீங்கறாங்க. எல்லாம் கூட்டுக்களவானிகளா இருக்காங்கனு' கோபமா பேசினாரு. என்ன நடந்ததுனு விசாரிச்சேன்.
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில, சமீபத்துல குடிநீர் மேல்நிலைத்தொட்டிய இடிச்சு தரை மட்டமாக்கினாங்க. கட்டட இடிபாடுகள்ல இருந்து, ஒன்றரை டன் இரும்பு கம்பி எடுத்திருக்காங்க. அதுமட்டுமில்லாம, பழைய இரும்பு போர்டுக, தள்ளுவண்டிக எல்லாம் அங்க குவிச்சு வச்சிருந்தாங்க. சில ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், அதையெல்லாம் எடுத்துச் சென்று, விற்று காசு பார்த்துட்டாங்கா.
பல லட்சம் ரூபா மதிப்புள்ள பழைய இரும்புகள், தெருவிளக்கு இரும்பு கம்பிகள விற்று பாக்கெட்ட நிரப்பிட்டாங்க. இந்த விவகாரம் வெளியில தெரிஞ்சதும், ஆளும்கட்சியில சிலரும், அதிகாரிகளும் சேர்ந்து, பழைய இரும்புகள ஏலம் விட்டதா கணக்கு முடிக்க பார்க்குறாங்க. அதுக்கும் குறைந்த விலைய நிர்ணயிச்சு இருக்காங்களாம். ஏலத்தொகையையும் பேரூராட்சி நிர்வாகமே சரிகட்டிக்கணும்னு சொல்லியிருக்காங்களாம், என, முழு விபரத்தையும் சொல்லி முடித்தார்.
விதிமீறும் தனியார் நிறுவனங்கள்சட்டம் ஒரு இருட்டறையாகுது
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டில் நண்பரை சந்தித்தேன். அவர், படிக்கற வயசுல, பசங்க வேலைக்கு போயி பணம் சம்பாதிக்கறதால, அவங்களோட எதிர்காலமே வீணாகுதுனு, பேச ஆரம்பித்தார். என்ன விஷயம்னு கேட்டேன்.
நம்ம ஊரு ரொம்ப டெவலப் ஆயிடுச்சு. நிறைய தனியார் கம்பெனி வந்திருக்கு. உள்ளூர் ஆட்கள் நிறையா பேருக்கு வேலை கிடைக்கும்னு சொன்னாங்க. ஆனா, ஒரு சில கம்பெனிகள் வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு வச்சிருக்காங்க.
பெரும்பாலான கம்பெனியில விதிமுறையை பின்பற்றுவது இல்ல. 18 வயசுக்கு குறைந்த பசங்க, பெண்களுக்கு வேலை கொடுத்திருக்காங்க. இத பத்தி கம்பெனி தணிக்கை செய்யும் போது தெரியாம இருக்க, தனி ரெஜிஸ்டர் மெயின்டெய்ன் பண்ணுறாங்க. இத தணிக்கை செய்யும் போது காட்ட மாட்டாங்க. அதுமட்டுமில்லாம, வயசை மாற்றி ஆதார் கார்டு டூப்ளிகேட் போட்டு பயன்படுத்தறாங்க.
சமீபத்துல, கிணத்துக்கடவு பகுதியில 18 வயசு நிரம்பாத தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதுக்கு துறை சார்ந்து என்ன நடவடிக்கையும் எடுக்கல. இதையெல்லாம் முறையா இன்ஸ்பெக்டர் ஆப் பேக்டரிஸ் வந்து கண்காணித்து தக்க நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும். படிக்கற வயசு பசங்க, பெண்கள் வேலைக்கு வரமாட்டாங்கனு, சொன்னார்.
வார்டுக்குள்ள போக முடியாதுதேர்தல்ல எப்படி ஓட்டு கேட்பாங்க!
வால்பாறையில், சட்டசபை தேர்தலுக்கு ஓட்டு கேட்டு, கவுன்சிலர்கள் வார்டுக்குள்ளேயே போக முடியாது போல இருக்கு, என, இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் உரையாடல் இதோ...
வால்பாறை நகராட்சியில, 21 வார்டுகள் இருக்கு. இதுல, 19 வார்டுல தி.மு.க., கவுன்சிலர்களும், அ.தி.மு.க., வி.சி., கட்சிக்காரங்க தலா ஒரு வார்டுலயும் கவுன்சிலரா இருக்காங்க.
சமீப காலமாக வார்டுகளில் எந்த வளர்ச்சிப்பணியும் நடக்கல. இதை, ஒவ்வொரு கவுன்சில் கூட்டத்திலும் கவுன்சிலர்களே பகிரங்கமா சொல்லறாங்க. வார்டுல தெருவிளக்குகள் கூட சரியா எரிவதில்லை. இதனால, வார்டுக்குள்ள கவுன்சிலர்கள் நுழைய முடியாத அளவுக்கு மக்கள் கேள்வி கேட்குறாங்க. தேர்தலுக்கு ஓட்டு கேட்டு போகும் போது பிரச்னையாகும்.
அதனால, தேர்தலுக்கு முன்னாடி, ஏதாவது வளர்ச்சிப்பணி செய்தால் தான் வார்டுக்குள்ள போக முடியும். இதுல, வளர்ச்சி பணிக்கு ஆளும்கட்சி பிரமுகரே முட்டுக்கட்டையாக இருக்கறாருனும் குற்றச்சாட்டு எழுந்திருக்கு. தேர்தல எப்படி எதிர்கொள்ள போறாங்கனு பொறுத்திருந்து பார்ப்போம்னு, பேசிக்கிட்டாங்க.
அரசாங்கமே லீவு விட சொன்னாலும்தலைமையாசிரியர்க கறாரா இருக்காங்க!
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் ஆசிரியர் நண்பரை சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். அவரு, 'அரசு உத்தரவிட்டாலும் அதையும் மீறுறாங்கனு,' பேச ஆரம்பித்தார். என்ன விஷயம்னு கேட்டேன்.
தமிழகத்துல, கோடை வெயில் முன்னரே துவங்கிட்டதால, முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி முடித்து, லீவு விட அரசு உத்தரவிட்டிருக்கு. அரசு வேலை நாட்களை குறைத்த பின்னரும் கூட, போதிய நாட்கள் இல்லைனு, ஒரு சில பள்ளி தலைமையாசிரியர்கள் சனிக்கிழமை பள்ளிகள நடத்துறாங்க.
தெற்கு ஒன்றியத்துல, 55க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கடந்த வாரம் சனிக்கிழமை வேலை நாளாக செயல்பட்டது. பல ஆண்டுகளாக, 210 வேலை நாட்களும் பள்ளி செயல்படுல. 200 வேலை நாட்கள்ல கூட, வெயில் காரணமா பள்ளிக்கு லீவு விட்டிருக்காங்க.
அரசு போதும்னு சொன்னாலும் இவங்க விடமாட்டுறாங்க. அடிக்கிற வெயிலில மாணவர்களை வர சொல்லறாங்க, என்றார்.
அரசு உத்தரவிட்டாலும், வேலை நாட்கள முடிக்கணும் ஆர்வம் காட்டுறாங்க போல; இருந்தாலும் இந்த வெயிலில் மாணவர்கள் பள்ளிக்கு வர்றது கஷ்டம் தான்னு, நண்பருக்கு ஆறுதல் சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.
குளத்துக்கு நீர் திறக்கும் உத்தரவசெயல்படுத்த போராட போறாங்க!
உடுமலை, பி.ஏ.பி., ஆபீஸ்க்கு போயிருந்தேன். அங்கிருந்த பூசாரிநாயக்கன் குளம் விவசாயிகள் காரசாரமா பேசிக்கிட்டு இருந்தாங்க.
உடுமலை, ஆலாம்பாளையத்தில் இருக்கற பூசாரிநாயக்கன் குளம், சுற்றிலும் இருக்கற, 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் இருக்கு. திருமூர்த்திமலை பாலாறு வாயிலாக இக்குளத்துக்கு நீர் வந்துட்டு இருந்த நிலையில, பி.ஏ.பி., திட்டத்துக்கு அணை கட்டினாங்க. அதுக்கப்புறம் குளத்துக்கு நீர் வர்றது கிடையாது.
போராட்டங்களுக்கு பின், குளத்துக்கு ஆண்டு தோறும் நீர் திறக்க அரசு உத்தரவிட்டிருக்கு. கோர்ட்டிலும் விவசாயிகளுக்கு சாதகமா தீர்ப்பு வந்திருக்கு. ஆண்டுக்கு இரு சுற்றுக்களாக நீர் வழங்கும் நிலையில், இரண்டாம் சுற்றுக்கு, 20 கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
ஆனா, பி.ஏ.பி., விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிச்சதால, அரசு ஆணையை செயல்படுத்த அதிகாரிக தயங்குறாங்க. திருமூர்த்தி அணையிலிருந்து, உப்பாறு அணை, வட்டமலைக்கரை ஓடைக்கு நடப்பாண்டு தண்ணீர் கொடுத்தப்ப எதிர்ப்பு தெரிவிக்கல. வெறும், 20 கனஅடி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கறாங்க.
இதனால, ஆலாம்பாளையம் குளத்தின் வாயிலாக பயன்பெறும் விவசாயிகள், பி.ஏ.பி., அலுவலகத்துல முற்றுகை போராட்டம் நடத்தணும். அப்ப தான், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்னு, பேசிக்கிட்டாங்க.
பள்ளி ஆசிரியர்கள கண்டாலே...கல்வித்துறையினர் ஓடுறாங்களாம்!
உடுமலை பஸ் ஸ்டாண்டில், பஸ் வருகைக்காக காத்திருந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்களை கரித்துக்கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சை கவனித்தேன். அதிலிருந்து...
உடுமலை வட்டாரத்துல ஆசிரியர்கள் சங்கங்களை பாத்தாலே, கல்வித்துறை அலுவலர்கள் ஓடி ஒழிஞ்சிக்கறாங்களே. பள்ளியில அடிப்படை வசதி தேவை, சங்கத்தோடகோரிக்கை, ஆசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்னைனு, ஏதாவது சொல்ல போனாலே, நாம வர்றத தெரிஞ்சுகிட்டு அலுவலகத்திலிருந்து கிளம்பிடுறாங்க.
எப்ப போனாலும், அலுவலகத்துல இருக்கிறதில்ல. கல்வித்துறை அலுவலர்கள்தான் இப்படி பண்ணுறாங்கனா, இல்ல இதுவும் கல்வித்துறையோட உத்தரவானும் புரியல. இப்படியே போன வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்க வேண்டியிருக்கும்னு, பேசிக்கிட்டாங்க.

