/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
356 விவசாயிகளுக்கு அபராதம் ரத்து செய்ய வேண்டுகோள்
/
356 விவசாயிகளுக்கு அபராதம் ரத்து செய்ய வேண்டுகோள்
ADDED : ஏப் 04, 2025 03:45 AM
கோவை; மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய 356 கிராம விவசாயிகள், பட்டா மற்றும் அரசு நிலங்களில் அனுமதியின்றி மண் எடுத்ததாக, குற்றஞ்சாட்டி, விசாரணைக்கு ஆஜராகுமாறு, கோவை தெற்கு கோட்டாட்சியர் ராம்குமார் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
கனமீட்டருக்கு, 160 ரூபாய் வீதம் அபராதம் விதித்து, ஒவ்வொரு விவசாயியும் பல லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் என, உத்தரவு பிறப்பித்துள்ளார். இது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள், கலெக்டரை சந்தித்து முறையிட்டனர்.
தேவராயபுரத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் கூறியதாவது:
மலையிலிருந்து பள்ள வாரிகளில், வரும் தண்ணீர் விளைநிலங்களில் பெருக்கெடுக்கும். நிலத்தை சமப்படுத்தியே விவசாயம் செய்ய முடியும். அதற்காக நாங்கள் எங்களது, நிலத்தை சமப்படுத்தினால் அபராதம் விதிக்கின்றனர். கனிமவளத்தை ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்லவில்லை. அப்படியிருக்கும் சூழலில், எங்கள் மீது அபராதம் விதிப்பது தவறு. அதனால் 356 விவசாயிகள் மீது விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை, திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

