/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.ஜே.கே., டிராபியை வென்றது புனித மைக்கேல் பள்ளி
/
ஏ.ஜே.கே., டிராபியை வென்றது புனித மைக்கேல் பள்ளி
ADDED : ஜன 07, 2025 07:15 AM

கோவை; நவக்கரை ஏ.ஜே.கே., கல்லுாரியில் நடந்த, பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டியில் புனித மைக்கேல் பள்ளி அணி, டிராபியை வென்றது.
ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வி துறை சார்பில், 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டி, இரு நாட்கள் கல்லுாரி மைதானத்தில் நடந்தது. மாவட்ட அளவிலான இப்போட்டியில், 12 பள்ளி அணிகள் பங்கேற்றன.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த இறுதிப்போட்டியில், டவுன்ஹால் புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளி அணியும், பண்டிட் நேரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நிறைவில், 19-18 என்ற புள்ளி கணக்கில், புனித மைக்கேல் பள்ளி அணி வெற்றி பெற்றது. போராடிய பண்டிட் நேரு பள்ளி அணி வீரர்கள், ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
'டாஸ்' அடிப்படையில் மூன்றாம் இடத்தை, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளி பிடித்தது.
நான்காம் பரிசு, மதுக்கரை கலைவாணி மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, ஏ.ஜே.கே., குழும நிறுவனங்களின் செயலாளர் அஜித்குமார் லால் மோகன் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.