/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனப்பகுதியில் உலாவும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை: அத்துமீறுவோருக்கு வனத்துறை எச்சரிக்கை
/
வனப்பகுதியில் உலாவும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை: அத்துமீறுவோருக்கு வனத்துறை எச்சரிக்கை
வனப்பகுதியில் உலாவும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை: அத்துமீறுவோருக்கு வனத்துறை எச்சரிக்கை
வனப்பகுதியில் உலாவும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை: அத்துமீறுவோருக்கு வனத்துறை எச்சரிக்கை
ADDED : மே 06, 2025 11:03 PM

பெ.நா.பாளையம்: 'வனப்பகுதியில் அனுமதி இன்றி உலாவும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கோடையின் வெப்பம் அதிகரிக்க துவங்கி உள்ளது. இதனால் வார விடுமுறைகளில் ஏராளமான பொதுமக்கள், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதை கட்டுப்படுத்த, வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.
வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைய கூடாது எனவும், எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை கொண்டு செல்லக்கூடாது எனவும், வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, வனப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள், தடையை மீறி பிளாஸ்டிக் பைகள், மது வகைகள், பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது.
இதனால் வனத்தில் தீ ஏற்பட்டால், விலை மதிக்க முடியாத அரிய வகை மரங்கள், உயிரினங்கள், நுண்ணுயிரிகள் அழியும். இச்சம்பவம் ஏற்பட காரணமானவர்கள் மற்றும் உடந்தையாக இருப்பவர்கள் மீது வன சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கூறுகையில்,' பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தை ஒட்டியுள்ள பகுதியில் குப்பைகளை எரிப்பது கூடாது. மலையோர கிராம மக்களுக்கு இது தொடர்பாக உரிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், வன எல்லையோரம் உள்ள வாட்ச் டவர்கள் வாயிலாக, காடுகளை கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது' என்றனர்.
இதுகுறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,'பொதுவாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் மேய்ச்சல் நிலத்தில் இருக்கும் புற்கள், கோடை காலத்தில் வேகமாக காய்ந்து விடுகின்றன.
அவற்றை அழித்தால்தான், அப்பகுதியில் புதிய புற்கள் முளைக்கும் என்பதால், மலைகளில் ஆடு, மாடு மேய்ப்பவர்களில் சிலர் புற்களுக்கு மாலை நேரங்களில் தீ வைத்து விட்டு, மலையில் இருந்து இறங்கி விடுகின்றனர். இதனால் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள் எரிந்து நாசமாகி விடுகின்றன. எனவே, மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் ஆடு, மாடுகளை மேய்க்க வனத்துறையினர் நிரந்தர தடை விதிக்க வேண்டும்' என்றனர்.