/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூலி உயர்வை எதிர்நோக்கும் விசைத்தறியாளர்கள் தை பிறந்தது; வழி பிறக்குமா ? மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு...
/
கூலி உயர்வை எதிர்நோக்கும் விசைத்தறியாளர்கள் தை பிறந்தது; வழி பிறக்குமா ? மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு...
கூலி உயர்வை எதிர்நோக்கும் விசைத்தறியாளர்கள் தை பிறந்தது; வழி பிறக்குமா ? மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு...
கூலி உயர்வை எதிர்நோக்கும் விசைத்தறியாளர்கள் தை பிறந்தது; வழி பிறக்குமா ? மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு...
ADDED : ஜன 15, 2024 10:28 PM
சோமனூர்;நெருக்கடியில் சிக்கி தவிக்கும் விசைத்தறி தொழிலை பாதுகாக்க, ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வை பெற்று தர மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. அவற்றில், 90 சதவீதம் விசைத்தறிகள் ஒப்பந்த கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. கடந்த காலங்களில், கடுமையான மின் கட்டண உயர்வு, தொழிலாளர்களின் கூலி உயர்வு, அச்சு பிணைத்தல், இழை வாங்குதல், ஒர்க் ஷாப் வேலை, வண்டி வாடகை, நாடாப்பட்டறை செலவினங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதனால், விசைத்தறி தொழில் நெருக்கடிக்குள் சிக்கியது.
விலைவாசிக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தால் தான், அவர்களை தக்க வைக்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்த அனைத்து பிரச்னைகளையும் ஓரளவுக்கு சமாளிக்க, ஒப்பந்த கூலி தான் உதவும் என்ற நிலை உள்ளது.
10 ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லை
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகாரிகள் முன்னிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி சங்க நிர்வாகிகள் இடையே கூலி உயர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். ஆனால், கடந்த, 10 ஆண்டுகளாக முறையான கூலி உயர்வு கிடைக்காமல் விசைத்தறியாளர்கள் தவித்து வருகின்றனர்.
கடந்த, 2014 ல் போடப்பட்ட ஒப்பந்தப்படி கூலி உயர்வை கொடுக்காமல், பல காரணங்களை கூறி, காலம் தாழ்த்தியதால், 2017 ல் விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய பின், கொடுப்பதாக கூறும் ஜவுளி உற்பத்தியாளர்கள், சில மாதங்கள் கொடுத்து விட்டு, பின்னர் கொடுப்பதில்லை, என, விசைத்தறியாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் குமாரசாமி, செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் பூபதி ஆகியோர் கூறியதாவது:
ஒப்பந்தப்படி கூலி உயர்வு கிடைத்தால் தான் தொழிலில் நீடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு கிடைத்தால் தான் விசைத்தறி ஜவுளி தொழிலை செய்ய முடியும். ஆனால், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தப்படி தான் தற்போது கூலி வழங்குகின்றனர். கூலி உயர்வை அமல்படுத்த முடியாததற்கு பல காரணங்களை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். அதை ஏற்க முடியாத நிலையில் உள்ளோம்.
தை பிறந்தது; வழி பிறக்குமா?
கூலி உயர்வை பெற்று நாங்கள் வைத்துக் கொள்வதில்லை. கூலி உயர்வால் வரும் பணத்தை கொண்டு, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கிறோம். சார்பு தொழிலுக்கு ஏற்ப கூலி கொடுக்கிறோம். கூலியை குறைத்தால், முழு சுமையையும் நாங்களே சுமக்க வேண்டிய நிலை கட்டாயம் ஏற்படுகிறது. கடந்த, 10 ஆண்டுகளாக கூலி உயர்வு கிடைக்காததால், பலர் தொழிலை விட்டு சென்று விட்டனர். அதனால், தொழிலையும், பல லட்சம் தொழிலாளர்களையும் காக்க, கூலி உயர்வு அவசியம். கடந்த, 2022 ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து, சோமனூர் ரகத்துக்கு, 60 சதவீத கூலி உயர்வும், பிற ரகத்துக்கு, 50 சதவீத கூலி உயர்வும் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பெற்று தர மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். தை பிறந்துள்ளது; வழி பிறக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.