பொள்ளாச்சி - உடுமலை இடையே பயணிக்க சுங்கக்கட்டணம் அதிகம்! 'டோல்கேட்' அருகே சர்வீஸ் ரோடு அமைக்கணும்
பொள்ளாச்சி - உடுமலை இடையே பயணிக்க சுங்கக்கட்டணம் அதிகம்! 'டோல்கேட்' அருகே சர்வீஸ் ரோடு அமைக்கணும்
UPDATED : ஜூலை 29, 2026 03:00 AM
ADDED : ஜூலை 28, 2026 05:00 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கோமங்கலம்புதுார் அருகே, 'டோல்கேட்' கட்டணம் அதிகமாக நிர்ணயித்துள்ளதை குறைக்க வேண்டும். சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் முழு கடையடைப்பு நடத்தப்படும்,' என, ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி -- திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மொத்தம், 3,649 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அதில், கோமங்கலம்புதுார் அருகே, 'டோல்கேட்' அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அதிகமாக இருப்பதால், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
இந்நிலையில், நேற்று தனியார் பஸ் உரிமையாளர்கள், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை, சிறு வியாபாரிகள் சங்கம் என, பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தார். தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தனியார் பஸ் உரிமையாளர்கள், பல்வேறு அமைப்பினர் பேசியதாவது:
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், கோமங்கலம்புதுார் அருகே ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த ரோட்டில் 'டோல்கேட்' அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் வாகனங்கள் செல்ல தனியாக சர்வீஸ் ரோடு அமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால், அனைவரும், 'டோல்கேட்' வழியாக செல்லும் நிலை உள்ளதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். நல்லாம்பள்ளி வரை பழைய ரோடு உள்ள சூழலில், மொத்தம், எட்டு கி.மீ.,க்கு மட்டும் புது ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த எட்டு கி.மீ., துாரத்துக்கு செல்ல, கார், ஜீப், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு, 155 ரூபாய்; இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு 250, பஸ், டிரக் உள்ளிட்ட வாகனங்களுக்கு 525 ரூபாய், கனரக சரக்கு வாகனங்கள், 575 ரூபாய் கட்டணம் (சிங்கிள் டிரிப்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆச்சிப்பட்டி - ஈச்சனாரி வரை ஏற்கனவே ரோடு போடப்பட்ட சூழலில் தற்போது அதையும் கணக்கிட்டு, கோமங்கலத்தில் டோல்கேட் அமைத்துள்ளதாக கூறுவது ஏற்க முடியாது. அதிக கட்டணம் செலுத்தி செல்ல இயலாது. கட்டணத்தை குறைக்க வேண்டும், இல்லையெனில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும்.
ஏற்கனவே தனியார் பஸ்கள் இயக்குவதில் பல்வேறு சிரமம் உள்ளது. சுங்க கட்டணம் அதிகம் வசூலித்தால் பாதிப்பு ஏற்படும். சிறு வியாபாரிகள் தினமும், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சரக்குகளை கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில், சரக்கு வாகனங்களுக்கு, அதிக கட்டணம் வசூல் செய்தால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். உள்ளூர் சரக்கு வாகனங்களுக்கு 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த வசதி, 'பாஸ்ட்டேக்' வாயிலாக மட்டும் கிடைக்கும். அதில், எவ்வாறு உள்ளூர் வாகனம் என தெரிந்து குறைந்த கட்டணம் வசூலிக்க முடியும் என்பது தெரியவில்லை.
பொதுப்போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட ரோட்டில், டோல்கேட் கட்டணம் அதிகமாக இருப்பது பாதிப்பை ஏற்படுத்தும். பழைய ரோடு இல்லாததால், பழநி பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர். அதிக கட்டணம், சர்வீஸ் ரோடு இல்லாததால் அனைவரும் பாதிக்கப்படுவர்.
சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும். அல்லது சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், முழு அளவில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
சப் - கலெக்டர் பேசுகையில், ''தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
