/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி தபால்துறையினர் போராட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி தபால்துறையினர் போராட்டம்
ADDED : அக் 12, 2024 01:45 AM
கோவை:கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க குரூப் 'சி' அமைப்பினர், மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
டில்லியில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், விவசாயிகள் அமைப்பினர் நடத்திய போராட்டத்துக்கு, நன்கொடை அளித்ததாக கூறி, தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப் 'சி' ஆகியவற்றின் அங்கீகாரத்தை, கடந்தாண்டு மத்திய அரசு திரும்ப பெற்றது. சென்னையில், தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு கூட்டத்தில், 'ராஞ்சி உயர்நீதிமன்றம், அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், நிர்வாகம் செயல்படுத்த முன்வரவில்லை.
நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய பிறகும், அலட்சியமாக இருக்கிறது. போராட்ட களத்தை மூன்று கட்டங்களாக அமைத்து போராட்டத்தை முன்னெடுப்பது' என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, வரும் 15ம் தேதி மாநிலம், கோட்ட, கிளை கழக தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, இரண்டாவது கட்டமாக, வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை கருப்பு பட்டை அணிந்து கோரிக்கையை வலியுறுத்தி, தபால் கார்டு, இ-மெயில் அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த மாதம் 12, 13ம் தேதிகளில், டில்லியில் உண்ணாவிரதம் மேற்கொளவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

