/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்களுக்கு பதிலும் இல்லை; தீர்வும் இல்லை!
/
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்களுக்கு பதிலும் இல்லை; தீர்வும் இல்லை!
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்களுக்கு பதிலும் இல்லை; தீர்வும் இல்லை!
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்களுக்கு பதிலும் இல்லை; தீர்வும் இல்லை!
ADDED : ஜன 22, 2025 08:09 PM

பொள்ளாச்சி; 'விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கும் பிரச்னைகளுக்கு, பதிலும் கிடைப்பதில்லை; தீர்வும் காணப்படாமல் உள்ளது. எனவே, இக்கூட்டத்துக்கு குறைகளை கேட்பு கூட்டமாக மாறிவருகிறது, என, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார்.
விவசாயிகள் பேசியதாவது:
அம்பராம்பாளையம் ஆற்றுப்படுகையில் துணி துவைப்பவர்கள், ஈமக்காரியம் செய்வோர், கழிவுகளை வீசிச் செல்வதால், நீர் நிலை மாசடைகின்றன.இதற்கு மாற்றாக அங்கு படித்துறை, ஈமக்காரியங்கள் செய்ய கூடாரமும் அமைக்க வேண்டும்.
காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளம், புதர்களை ஆய்வு செய்து அவற்றை கொன்றோ அல்லது பிடித்தோ வனப்பகுதியில் விட வேண்டும்.
'டிரக் தமிழ்நாடு' திட்டத்தில், 'ஆழியாறு கானல் பாங்க்' என்ற பெயரில், காண்டூர் கால்வாய் வழியாக டிரக்கிங் அழைத்துச் செல்லப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அழைத்து செல்வது நியாயமாக இல்லை.
பாதுகாக்கப்பட்ட பகுதியில், விவசாயிகளே, அதிகாரிகளுடன் தான் செல்ல முடியும் என்ற நிலையில், மலையேற்றத்துக்கு அனுமதி கொடுத்தது தவறு. இதை ரத்து செய்ய வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கால்வாய்களை துார்வார வேண்டும். சேத்துமடை பிரதான கால்வாய் அருகே தனியார் ரிசார்ட்டில் இருந்து வரும் கழிவுநீர் கலக்கிறது. சேத்துமடை அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் கலக்கிறது. இதை தடுக்க வேண்டும்.
கால்நடைகளை அம்மை நோய் தாக்குகிறது.அதில், கன்றுகள் இறக்கின்றன. இதற்கு முகாம்கள் நடத்த வேண்டும்.தேங்காய்க்கான செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும்.
ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் ரோடு விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டப்பட்டும், இன்னும் ரோடு போடவில்லை. சப் - கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்; சப் -ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இருக்கை வசதி வேண்டும்.
கோதவாடி குளத்துக்கு நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இவற்றை ஆய்வு செய்து அகற்ற வேண்டும். அரணி கால்வாய்கள், லே - அவுட் பிரிக்கும் போது சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும். கோதவாடி குளத்தை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் பிரச்னைகளுக்கு பதிலும் தெரிவிப்பதில்லை. நடவடிக்கை எடுத்து தீர்வும் காண்பதில்லை. மாதந்தோறும் வெறும் சடங்கு போன்று கூட்டம் நடக்கிறது.
ஒரு சில மனுக்களுக்கு, நடவடிக்கை எடுக்கப்படும்; பரிசீலனையில் உள்ளது, அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, என, சம்பிராதய பதில்களே வருகின்றன.
பதில் சொல்லக்கூடிய அதிகாரிகள் கூட்டத்துக்கு வருவதில்லை; அவர்களுக்கு பதிலாக கடை நிலை அலுவலர்களை கண்துடைப்புக்கு அனுப்புகின்றனர். குறைதீர் கூட்டம், குறை கேட்பு கூட்டமாக நடத்தப்பட்டு தீர்வு தரக்கூடியதாக முடிய வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.