/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார சீர்கேட்டுக்கு தீர்வு கிடைக்கும்; மக்கள் ஒத்துழைப்பு மாசு குறைக்கும்
/
சுகாதார சீர்கேட்டுக்கு தீர்வு கிடைக்கும்; மக்கள் ஒத்துழைப்பு மாசு குறைக்கும்
சுகாதார சீர்கேட்டுக்கு தீர்வு கிடைக்கும்; மக்கள் ஒத்துழைப்பு மாசு குறைக்கும்
சுகாதார சீர்கேட்டுக்கு தீர்வு கிடைக்கும்; மக்கள் ஒத்துழைப்பு மாசு குறைக்கும்
ADDED : ஜூன் 08, 2025 10:18 PM

சூலுார்; நீர் வழித்தடங்கள், சாக்கடை கால்வாய்களில் மக்கள் கொட்டும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பையால், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகிறது. மக்கள் ஒத்துழைப்பு இருந்தால், சுகாதார சீர்கேட்டுக்கு தீர்வு கிடைக்கும்.
கோவை மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, ஏழு நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்களில், 228 ஊராட்சிகள் உள்ளன. 34 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
தினமும், பல நுாறு டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஆனாலும், நகர்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சிகளில் கழிவுகள், குப்பை குவிந்து சுகாதார சீர்கேடு பல மடங்குஅதிகரித்துள்ளது.
துாய்மை பாரதம்
மத்திய அரசின் துாய்மை பாரத திட்டத்தின் கீழ், துாய்மை பணிகளை அனைத்து உள்ளாட்சிகளிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, உள்ளாட்சி நிர்வாகங்கள் செயல்படுத்தி வருகின்றன. பல கோடி ரூபாய் நிதி ஆண்டு தோறும் ஒதுக்கப்பட்டாலும், உள்ளாட்சிகளில் துாய்மை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பிளாஸ்டிக் அரக்கன்
சுகாதார சீர்கேட்டுக்கு முக்கிய எதிரியாக உள்ளவை பிளாஸ்டிக் கழிவுகளும், தொழிற்சாலை கழிவுகளும் தான். இந்த மக்காத கழிவுகள் மூலம், மண்ணும் மலடாகிறது. மனிதனும் மலடாகி வருகிறான். எங்கு திரும்பினாலும் பிளாஸ்டிக் குப்பை, கழிவுகள் தான் கண்ணில் படும் அளவுக்கு உள்ளாட்சிகளில் நிலைமை மோசமாகி வருகிறது.
திணறும் துாய்மை பணியாளர்கள்
திடக்கழிவு மேலாண் மை திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மை பணியாளர் உள்ளனர். ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் எண்ணிக்கை எந்த ஊராட்சியிலும் இல்லை. குறைந்த சம்பளத்தில், சுகாதாரத்தை மீட்கும் முயற்சியில் அவர்களின் உழைப்பு என்பது அபரிமிதமானது. தங்கள் சக்தி மீறி உழைக்கும் அவர்களுக்கு, மக்களின் ஒத்துழைப்பு இல்லை.
நம்மில் சிலர் தான் காரணம்
வீட்டை சுத்தமாக வைத்திருக்கும் நாம், ஊரை சுத்தமாக வைத்திருக்க முன்வருவது இல்லை. காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க அருகில் உள்ள கடைக்கு செல்லும்போது கூட, மஞ்சப்பை அல்லது கூடை எடுத்து செல்வதில்லை. கடையில் இருந்து பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி வருவதும், பொருட்களை எடுத்துக்கொண்டு, அந்த கவர்களை ,வீதியிலும், சாக்கடையிலும் வீசுவதை வாடிக்கையாக கொண்டுள்ள சிலர்தான் சுகாதார சீர்கேட்டை ஊருக்குள் விதைக்கின்றனர்.
அடைத்துக் கொள்ளும் சாக்கடை
சாக்கடை கால்வாய்க்குள் எதைத்தான் போடுவது என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல், பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், பால் கவர்கள், மருந்து பாட்டில்கள் என அனைத்தையும் போடுகிறோம்.
இதனால், ஏற்படும் அடைப்புகளால், கழிவு நீர் வெளியேறாமல் தேங்குகிறது. மழை பெய்தால், மழை நீரும் கழிவுநீருடன் கலந்து ரோட்டில் ஓடுகிறது.
தாழ்வான பகுதிகளில் கழிவு நீர் தேங்கி, பல்வேறு நோய்களுக்கு காரணமாகிறது.
திருந்தவேண்டும்
சுகாதார சீட்கேட்டுக்கான அனைத்தையும் நாம் செய்து விட்டு, அரசை, அரசு நிர்வாகத்தை குறை கூறுவதால் எந்த பயனும் இல்லை. முதலில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வீட்டுக்குள் இருந்து, மக்கும், மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அப்போதுதான், திடக்கழிவு மேலாண்மையை முறையாக செயல்படுத்தி உள்ளாட்சி அமைப்புகள் மேம்படும்.