/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண மோசடியில் ஈடுபட்ட கேரள நபர்கள் மூவர் கைது
/
பண மோசடியில் ஈடுபட்ட கேரள நபர்கள் மூவர் கைது
ADDED : மே 18, 2025 01:00 AM

கோவை : ஆன்லைன் பகுதி நேர வேலை வாய்ப்பு எனக் கூறி, பண மோசடி செய்த கேரளாவை சேர்ந்த மூவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கோவை, ஜெம் நகரை சேர்ந்தவர் குமார், 30 (பெயர் மாற்றப்பட்டுள்ளது); தனியார் நிறுவன ஊழியர். இவரது 'டெலிகிராம்' எண்ணுக்கு கடந்த மார்ச் மாதம், 'ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்வதன் மூலம், தினசரி 2500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்' என குறிப்பிட்டு, ஒரு குறுஞ்செய்தி வந்தது.
குமார் விசாரித்த போது, அவருக்கு ஒரு போலி இணையதள 'லிங்க்' அனுப்பி, அதில் பதிவு செய்ய கூறியுள்ளனர். முன்பணம் செலுத்தி அவர்கள் கொடுக்கும் 'டாஸ்க்கை' செய்து முடித்தால் 'போனஸ்' கிடைக்கும் எனவும், அதன் மூலம் தினசரி ரூ.900 முதல் 2500 வரை சம்பாதிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
இதை நம்பி, குமார் முதலில் கட்டணம் செலுத்தி, அவர்கள் அனுப்பிய நிறுவனங்கள் குறித்து கூகுளில் சென்று, 'ரிவ்யூ' செய்துள்ளார். 20 நிறுவனங்களுக்கு ரிவ்யூ செய்த பிறகு, குமாருக்கு ரூ. 872 'போனஸ்' கிடைத்துள்ளது.
இதையடுத்து, குமார் பல்வேறு தவணைகளில், ரூ. 6.80 லட்சம் பணத்தை, மோசடி நபர்கள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பினார். அதன் பின் அவருக்கான 'போனஸ்' பணம் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமார், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பண மோசடி செய்தது திருச்சூரை சேர்ந்த அனந்து கிருஷ்ணா, 20, விஷ்ணு 28, சுஜித் 26 என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கேரள மாநிலம், திருச்சூருக்கு சென்ற கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், மூவரையும் கைது செய்தனர்.