/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருப்பூர்: ஜவுளி, ஆடைத்துறைக்கு ஊக்கம்
/
திருப்பூர்: ஜவுளி, ஆடைத்துறைக்கு ஊக்கம்
UPDATED : பிப் 02, 2026 06:57 AM
ADDED : பிப் 02, 2026 06:56 AM

ஜவுளி, ஆடைத்துறைக்கு ஊக்கம்
மத்திய பட்ஜெட் குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.) தலைவர் சக்திவேல் கூறியதாவது:
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மூன்று நிலை ஆதரவு அமைப்பு விரிவாக்கம்; கடன் வசதிக்காக ஏழு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு; 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சி நிதி; குறுந்தொழில்களுக்காக, 2000 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு; கடன் உத்தரவாத திட்டம் விரிவாக்கம் என, பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பாரம்பரிய துணி நுால் கிளஸ்டர்களை நவீனமாக்க, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மெகா ஜவுளி பூங்கா, செயற்கை நுாலிழை உற்பத்தி, தொழில்நுட்ப ஜவுளி மற்றும் விளையாட்டு ஆடை உற்பத்திக்கு சிறப்பு ஊக்குவிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதிவேக ரயில் வழித்தடம், புதிதாக, கன்டெய்னர் பெட்டிகள் உற்பத்திக்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் முழுமையான அணுகுமுறை, ஜவுளி , ஆடைத்துறை வளர்ச்சிக்கு வலுவான ஊக்கமாக அமையும். இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மற்றும் 'சோர்சிங்' மையமாகவும் வலுப்படுத்தும்.
முதலீடுகளை ஈர்த்து ஏற்றுமதி அதிகரிக்கும்
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது:
மத்திய பட்ஜெட் இந்தியாவின் போட்டித்திறனை உயர்த்தும் நோக்கத்துடன் அமைந்துள்ளது.
தேசிய நார் இயக்கம் மூலம், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் தன்னிறைவை உருவாக்கும் முயற்சி துவங்கியுள்ளது. பருத்தி உற்பத்தித் திறன் இயக்கம் வாயிலாக, பருத்தி விளைச்சலை உயர்த்தி, அதிக நீள நார் வகை உற்பத்தி ஊக்குவிக்கப்படும். இதன் மூலம், தடையில்லாமல் பஞ்சு கிடைக்கும்.
'சமர்த் 2.0' திட்டத்தால், திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர் உருவாக்கப்படுவர். சுற்றுச்சூழலுக்கு உகந்த, உலகத் தரத்திலான துணி மற்றும் ஆடை உற்பத்தியிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய மெகா ஜவுளி பூங்காக்கள் அமைப்பது, முதலீடுகளை ஈர்த்து, ஏற்றுமதியை ஊக்குவிக்கும்.
ஜவுளி இயந்திரங்களுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.முதல் முறையாக தொழில் தொடங்குவோருக்கான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுடன் இணைந்து செயல்பட, தொழில்துறையினரும் தயாராக இருக்கிறோம்.
ஏற்றுமதிக்கு விதிமுறை தளர்வை வரவேற்கிறோம்
விசைத்தறி ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல் கூறியதாவது:
நீண்டகால கோரிக்கையான கன்டெய்னர் உற்பத்திக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிராந்தியங்கள் இடையிலான நீர்வழி முனையங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவிரைவு ரயில் திட்டம் தொழில்துறையினருக்கு மட்டுமன்றி, தொழிலாளர்கள் தடையின்றி வந்து செல்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து மூலதன பொருட்களை இறக்குமதி செய்தபின், அவற்றை மதிப்பு கூட்டுப் பொருளாக்கி ஏற்றுமதி செய்ததற்கான ஆவணங்களை ஆறு மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு ஓராண்டு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இந்தியா- - ஐரோப்பிய ஒப்பந்தத்தின் மூலமாக ஜவுளி தொழில் துறையின் எதிர்பார்ப்புகள் நிறைவேறின.

