/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று பீளமேடுக்கு 314வது பிறந்த நாள்!
/
இன்று பீளமேடுக்கு 314வது பிறந்த நாள்!
ADDED : நவ 11, 2025 12:55 AM
பீ ளமேடு என்ற ஊர் உருவாகி இன்றுடன், 314 ஆண்டுகள் ஆகின்றன. பீளமேட்டின் உண்மையான பெயர் பூளைமேடு. பூளைச்செடிகள் மண்டி வளர்ந்து இருந்ததால், இதற்கு பூளைமேடு என்ற பெயர் வந்தது. காலப்போக்கில் இது, பீளமேடு என்றானது.
கோவையில், 1710ம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டபோது, பழைய ஆவாரம்பாளையம் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம் அதில் அழிந்து போனது. 1711-ம் ஆண்டு நவ.16-ம் தேதி பெரிய பாப்பா நாயுடு முயற்சியால், தற்போதுள்ள பாப்பநாயக்கன்பாளையம் உருவானது. இதே ஆண்டு நவ. 11ம் தேதி, இப்போதுள்ள பீளமேடு உருவானது.
வெள்ளத்தால் வீடுகளை இழந்த நாயுடு சமூக மக்கள், மைசூர் மன்னர் இரண்டாம் காந்தீரவ நரசராஜாவின் அனுமதியுடன், 1711 நவ.11ம் தேதி பூளைமேடு பகுதியில் குடியேறி, இந்த கிராமத்தை உருவாக்கினர்.
பீளமேட்டில் பழமையான மாரியம்மன் கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில், ஆஞ்சனேயர் கோயில், அகிலாண்டேசுவரி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. நுாற்றாண்டு பழமையான சர்வஜன பள்ளி, பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகள், நெசவாலைகள், தொழிற்சாலைகள், விமானநிலையம், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிலையம், கொடிசியா வர்த்தக வளாகம் என, பாரம்பரிய வரலாற்று அடையாளங்கள் பல உள்ளன.
நகரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பீளமேட்டுக்கு, உரக்க சொல்லுவோம் ஒரு 'ேஹப்பி பர்த் டே!'

