/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் பானைகள் செய்ய களிமண் கிடைக்காமல் அவதி
/
பொங்கல் பானைகள் செய்ய களிமண் கிடைக்காமல் அவதி
ADDED : ஜன 02, 2026 05:12 AM

மேட்டுப்பாளையம்: தைப்பொங்கலுக்கு பானைகள் செய்ய களிமண் கிடைக்காமல், குலாலர்கள் அவதிப்படுகின்றனர்.
தைப்பொங்கல் அன்று புது பானைகளில் பொங்கலிட்டு சூரியனை வழிபடுவர். பொங்கல் விழாவை, கிராமங்களில் மட்டுமல்லாமல், நகரில் வசிக்கும் மக்களும், புது பானைகள் வாங்கி, வாசலில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். தற்போது மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளர்கள், கிராமங்களில் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.
இதுகுறித்து காரமடை அடுத்த மருதூரை சேர்ந்த பழனிசாமி கூறியதாவது:
கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை, மண் சட்டிகள் மற்றும் பானைகளின் பயன்பாடு அதிகம் இருந்ததால், உற்பத்தியும் அதிக அளவில் இருந்தது. இதை பலர் தொழிலாக செய்து வந்தனர். காலப்போக்கில் அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்களின் ஆதிக்கம் அதிகரித்ததால், மண்பாண்டங்கள் உபயோகம் குறைந்தது. தற்போது ஒரு சிலர் மட்டுமே இந்த தொழிலை செய்து வருகின்றனர். ஆனால் அந்தந்த காலகட்டத்தில், மக்கள் மண் பாண்டங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் இத்தொழில் இன்னும் அழியாமல் உள்ளது. பொங்கல் அன்று புதுப்பானையில் பொங்கல் வைக்கவும், கார்த்திகை தீபத்தன்று, புது மண் விளக்கில் தீபம் ஏற்றவும், திருமணம் மற்றும் துக்க காரியங்களுக்கு புதிய மண் சட்டி, பானைகளை, பழமை மாறாமல் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய, அந்தந்த காலகட்டத்தில் குறைவான அளவில் மண் பாண்டங்களை செய்து வருகிறோம்.
இதற்கு தேவையான களிமண்ணை, வெளியூர்களில் இருந்து எடுத்துவர அதிகாரிகள் அனுமதி அளிப்பதில்லை. இந்த தொழில் நலிவடைவதற்கு, இதுவும் ஒரு காரணமாகும். மேலும் களி மண் கிடைக்காததால், பொங்கல் பானைகள் அதிகளவில் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, இருப்பு வைத்துள்ள மண்ணை வைத்து பொங்கல் பானைகள் செய்து வருகிறோம்.
எனவே இந்த தொழிலை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல, பல இடங்களில் மண் பாண்டங்கள் செய்யும் பயிற்சி நிலையம் அமைத்து, சுய வேலை வாய்ப்பை, தமிழக அரசு ஏற்படுத்தி தர முன்வர வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி கூறினார்.

