UPDATED : ஜூலை 20, 2026 06:54 PM
ADDED : ஜூலை 20, 2026 06:50 PM
சிறுமுகை: சிறுமுகை அடுத்துள்ள ஜடையம்பாளையம் பகுதியில், தனியார் உர கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு கூலி வேலை செய்யும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிசி யாதவ், 26, கடந்த 16ம் தேதி இரவு, கம்பெனியில் மதுபோதையில் இருந்த போது, அங்கு பணிபுரியும் பீகாரை சேர்ந்த சகோதரர்களான அஜித், 42, உஜீத், 40, ஆகியோருடன் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அஜித் மற்றும் உஜீத் இருவரும், இரும்பு பைப்பால் பிசி யாதவை தாக்கினர்.
பின்னர், பிசி யாதவ் முறையாக சிகிச்சை பெறாமல், கம்பெனியில் தவறி விழுந்ததாக பொய் சொல்லி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி பிசி யாதவின் உடல்நிலை மோசமானதால், உடன் வேலை செய்யும் நபர்கள் தனியார் ஆம்புலன்ஸ் வாயிலாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.
இதுசம்பந்தமாக விசாரணை செய்த சிறுமுகை போலீசார், பிசி யாதவை தாக்கிய அஜித், உஜீத் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நேற்று முன் தினம் இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
----
