/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதாரமற்ற குடிநீர்; மக்கள் கடும் அதிருப்தி!
/
சுகாதாரமற்ற குடிநீர்; மக்கள் கடும் அதிருப்தி!
ADDED : ஜன 03, 2025 10:16 PM

வால்பாறை; வால்பாறை நகரில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் தொட்டி சுத்தப்படுத்ததால், பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
வால்பாறை நகர் பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு வால்பாறை நகராட்சி சார்பில் கருமலையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, அங்குள்ள பழமையான குடிநீர் தொட்டியில் தண்ணீர் தேக்கி வைத்து வினியோகம் செய்கின்றனர். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் தொட்டி சுத்தப்படுத்தாததால், குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூறியதாவது:
வால்பாறை நகராட்சி சார்பில், பழைய குடிநீர் தொட்டி வாயிலாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் தொட்டி சுத்தப்படுத்தி பல ஆண்டுகளாகிறது. பிளீச்சிங் பவுடர் கூட போடுவதில்லை. பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குடிநீர் தொட்டியில் அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது.
மேலும், குடிநீர் தொட்டியை ஒட்டி சாக்கடை கால்வாய் செல்வதால், மக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் பாதுகாப்பானதாக இல்லை. தொட்டியை சுத்தப்படுத்தி, பாதுகாப்பான குடிநீர் வழங்க நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறை நகரில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. மழையின் காரணமாக பல இடங்களில் குடிநீர் தொட்டி சுத்தப்படுத்த முடியவில்லை. வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை விரைவில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.