/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதாரமற்ற டாட்டூ... தோலுக்கு வேட்டு
/
சுகாதாரமற்ற டாட்டூ... தோலுக்கு வேட்டு
ADDED : நவ 09, 2024 11:38 PM

சுகாதாரமற்ற டாட்டூவால் தோல் டி.பி., ஆபத்து உள்ளதாக டாக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் அதிகமானோர் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
ரயில்வே ஸ்டேஷன், தபால் அலுவலம் உள்ள பகுதியில் சாலையில் அமர்ந்து வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர், பயணியருக்கு டாட்டூ குத்தி வருகின்றனர். குறைந்த விலைக்கு டாட்டூ குத்துவதால், வடமாநிலத்தை சேர்ந்த மற்றும் ரயில்வே ஸ்டேஷன் வரும் அதிகமான பயணியர் டாட்டூ குத்தி கொள்கின்றனர். இந்த சுகாதாரமற்ற டாட்டூவால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜனனி கூறியதாவது:
சாலையோரம் குறைந்த விலைக்கு குத்தப்படும் டாட்டூவால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்கள் யோசிப்பது இல்லை. டாட்டூவினால் இறப்பு கூட ஏற்படுகிறது. அவர்கள் எந்த மாதிரியான உபகரணங்கள் மற்றும் 'மை' பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனமாக பார்க்க வேண்டும்.
மைகளில் பல்வேறு வேதிப்பொருட்கள் உள்ளதால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அது பல மாதம், பல வருடம் கழித்து கூட வரலாம். அப்போது அதை அறுவை சிகிச்சை செய்து தான் குணப்படுத்த முடியும். அதேபோல சுகாதாரமற்ற டாட்டூக்களால் பாக்டீரியல், வைரல் தொற்று ஏற்படலாம்.
பாக்டீரியல் தொற்றால் தோல் டி.பி., வர வாய்ப்பு உள்ளது. வைரல் தொற்று ரத்தத்தின் வழியாக உடலுக்குள் சென்று, உடல் உறுப்புக்களை பாதிக்கிறது. சில சமயங்களில் புற்றுநோய் வரவும் வாய்ப்பு உள்ளது. டாட்டூ குத்தும்போது ஊசியை மாற்றினாலும், ஒரே மையை தொட்டு தொட்டு குத்துகின்றனர். அது ஆபத்தானது. டாட்டூ குத்துவதை விட, அதை அகற்ற பல மடங்கு வலியை தாங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.