/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முருகன் கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா
/
முருகன் கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா
ADDED : ஜூன் 09, 2025 10:05 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள, முருகர் கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது.
சிறுமுகை பழத்தோட்டம் பாலசுப்ரமணியர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடந்தது. காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்பு பவானி நதியில் இருந்து, 108 குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு பாலசுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தாலிச் சரடு வழங்கப்பட்டது. மதியம் மூலவருக்கு அலங்கார பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கல்யாண அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம், சுப்ரமணியர் சுவாமி கோவிலில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.
அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பி வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவிலில், பாலமுருகன் சன்னதியில் முருக பெருமானுக்கு பால், தயிர், தேன் என 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வனிதா மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
* சூலுார் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நேற்று நடந்தது. சூலுார் வைத்திய நாத சுவாமி கோவில், கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு சென்னி யாண்டவர் கோவில், கண்ணம் பாளையம் கோவை பழனியாண்டவர் கோவில், காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவில், குமரன் குன்று அறுபடை முருகன் கோவில்களில், சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து,சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனைத்து கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் பஙகேற்று வழிபட்டனர்.