/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கலெக்டர், கமிஷனர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர நோட்டீஸ்
/
அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கலெக்டர், கமிஷனர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர நோட்டீஸ்
அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கலெக்டர், கமிஷனர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர நோட்டீஸ்
அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கலெக்டர், கமிஷனர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர நோட்டீஸ்
ADDED : நவ 05, 2025 12:05 AM
கோவை: ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்த தவறியதற்காக, கோவை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக, ஊழல் எதிர்ப்பு இயக்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயலர் வேலு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தில் அனுமதியற்ற மற்றும் விதிமீறல் கட்டடங்களை கண்டறிந்து, அவற்றை இடிப்பதற்கு மாவட்டம்தோறும் உயர்மட்ட குழு அமைக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டது.
தலைவராக கலெக்டர், கன்வீனராக மாநகராட்சி கமிஷனர் மற்றும் போலீஸ் கமிஷனர் அல்லது எஸ்.பி., நகர ஊரமைப்பு துணை இயக்குனர், நகராட்சி நிர்வாகங்களின் மண்டல இயக்குனர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக சேர்க்க அறிவுறுத்தியது.
செயல்திட்டம் தயாரிக்கணும் இக்குழு அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை கண்டறிய வேண்டும். மாதம் ஒரு முறை கூடி, அவற்றை அகற்ற செயல் திட்டம் தயாரிக்க வேண்டும். அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளையும் மேற்கொண்டு, எதிர்காலத்தில் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் உருவாகாமல் தடுத்து நிறுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
தெள்ளத்தெளிவாக வழிமுறைகளை வழங்கி, உத்தரவுகளை நிறைவேற்ற அறிவுறுத்தி, ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும், கலெக்டரும், மாநகராட்சி கமிஷனரும் செயல்படுத்த தவறியுள்ளனர்.
விதிமுறையை அப்பட்டமாக மீறிய, நுாற்றுக்கணக்கான அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் நகரம் முழுவதும் இருந்தபோதிலும், ஐகோர்ட் மற்றும் அரசாணைப்படி, இதுவரை ஒன்று கூட அடையாளம் காணப்பட்டு அகற்றப்படவில்லை.
அதிகாரிகளின் கடமை அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களின் பட்டியல், கண்காணிப்பு குழுவால் தயாரிக்கப்படவில்லை. மாதாந்திர கூட்டம் கூட கூட்டப்பட்டு, தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன.
கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், கோர்ட் உத்தரவு மற்றும் அதுதொடர்பான அரசாணை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டியது, கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனரின் கடமை.
கடமையை செய்யத் தவறுவது, கோர்ட் உத்தரவை நிராகரித்த குற்றமாகும். இது, பொது நலனுக்கு எதிரானது. அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் கட்டுவதைத் தடுக்கத் தவறுவது ஊழலுக்கு வழிவகுக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் ஒப்புதல் இல்லாமலோ அல்லது அவர்களுக்குத் தெரியாமலோ, எந்தவொரு அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தையும் கட்ட முடியாது.
வழக்கு தொடரப்படும் உத்தரவுகளைச் செயல்படுத்த தவறியதற்கான காரணங்களை தெளிவுபடுத்த வேண்டும். நோட்டீஸ் கிடைத்த நாளில் இருந்து குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்குள், ஐகோர்ட் உத்தரவு மற்றும் அதுசார்ந்த அரசாணையை நிறைவேற்றி, அத்தகவலை அளிக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில், கோர்ட் உத்தரவை வேண்டுமென்றே புறக்கணித்த குற்றத்துக்காக, 1971ம் வருடத்திய நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் பிரிவு 12ன் கீழ், இருவர் மீதும் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

