/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்குகள் நடமாட்டம்; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
/
வனவிலங்குகள் நடமாட்டம்; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
வனவிலங்குகள் நடமாட்டம்; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
வனவிலங்குகள் நடமாட்டம்; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
ADDED : செப் 03, 2025 10:59 PM

வால்பாறை; வால்பாறை மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், சுற்றுலா பயணியர் இடையூறு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வால்பாறை மலைப்பாதையில் வரையாடு, குரங்கு, சிங்கவால் குரங்கு என, வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. வால்பாறையில் குளுகுளு சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தி வனவிலங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்குகின்றனர். இதனால், உணவுபொருட்களுக்காக வனவிலங்குகள் சாலையோரத்திலேயே முகாமிடுகின்றன.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் இருந்து அட்டகட்டி வழியாக, பொள்ளாச்சி ரோட்டில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களில் வந்து செல்கின்றனர். மலைப்பாதையில் வாகனங்களில் செல்வோர் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி, வனவிலங்குகளுக்கு உணவு வழங்குகின்றனர்.
குறிப்பாக, குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் சுற்றுலா பயணியர் வழங்கும் உணவுக்காக ரோட்டில் நடமாடும் குரங்குகள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
எனவே, குரங்குகளுக்கு உணவு வழங்குவதை சுற்றுலா பயணியர் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.