ADDED : மார் 09, 2026 06:59 AM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டன.
பெரியநாயக்கன்பாளையம் தேசிய மனித மேம்பாட்டு மையம், கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து, மகளிர் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது. விழாவில், கவி ரத்னா வரவேற்றார்.
முதல் நிகழ்வாக வரவேற்பு நடனம், பாடல் மற்றும் கவிதை போட்டிகள் நடந்தன. பெண்களின் முக்கியத்துவம் குறித்து திருக்குறளில் உள்ள கருத்துக்களை கணேசன் விவரித்தார். இவரைத் தொடர்ந்து ஸ்ரீதர் மற்றும் கண்ணப்பன், நிதி சார் கல்வி ஆலோசகர் ரவி, தமிழ்நாடு கிராம கதர் கைத்தொழில் தொழில் வாரியத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர், பெண்ணின் பெருமைகளை எடுத்துக் கூறினர்.
தொடர்ந்து, சாதனை பெண்களின் அறிமுகம் மற்றும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சியில், கரகாட்டத்தில் சாதனை படைத்த கரூர் துர்கா, திண்டுக்கல் பாடகி மங்கையர்க்கரசி, யோகா சாதனை பெண் லம்பிகா அருள் செல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த, 12 பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, தேசிய மனித மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே நஞ்சுண்டேஸ்வரி நகரில் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடந்தது. ரதி சுதா தேவி வரவேற்றார். செல்வி சம்யுக்தா நடனம் நடந்தது. சிறந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பெரியநாயக்கன்பாளையம் அஞ்சலகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

