அடிப்படை வசதி குறைகளை வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம்
அடிப்படை வசதி குறைகளை வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம்
ADDED : செப் 23, 2025 09:11 PM

மேட்டுப்பாளையம், ;மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள குறைகளை தெரிவிக்க, புதிதாக வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் இதில் புகார்களையும், குறைகளையும் தெரிவிக்கலாம் என நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் பொது மக்களின் அடிப்படை வசதி குறைகளை தீர்க்கும் வண்ணம், புதிதாக வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில், மேட்டுப்பாளையம் நகராட்சியில் முதன் முதலில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், வாட்ஸ் அப்பை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் அமுதா தலைமை வகித்த பேசியதாவது: திடக்கழிவு மேலாண்மை பணிகள், குடிநீர் விநியோகப் பணிகள், தெருவிளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை பணிகள் ஆகிய அடிப்படை வசதிகளில், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், 97917 48800 என்ற வாட்ஸ் அப்பில், பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். குரல் வாயிலாகவும், செய்தியாகவும் அனுப்பலாம்.
தேவை எனில் போட்டோ, வீடியோ ஆவணங்களையும் அதில் இணைத்து அனுப்பலாம். இந்த வாட்ஸ் அப் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, நிவர்த்தி செய்யும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும்.
எனவே இந்த வாட்ஸ் அப்பை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு கமிஷனர் பேசினார். நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு, இன்போ மேப்ஸ் நிர்வாக இயக்குநர் நந்த கிஷோர், வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
