/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தலில் சொன்னீங்களே... செய்தீங்களா?
/
தேர்தலில் சொன்னீங்களே... செய்தீங்களா?
ADDED : மார் 08, 2024 12:12 PM
தமிழகத்தில், கொங்கு மண்டலம், விவசாயம், தொழில்துறை, மருத்துவம், கல்வி அனைத்திலும் முன்னணியில் உள்ளது. மாநில வருவாயில் கொங்கு மண்டலத்தின் பங்களிப்பு முக்கியமானது. கொங்கு மண்டலத்தில் குறிப்பாக, கோவை, திருப்பூர், மாவட்ட விவசாயத்தில் முக்கிய தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.
l தென்னையில் கேரள வாடல் நோய், வெள்ளை ஈ, குறுத்து கட்டை நோய் பாதிப்புக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இந்த நோய் தாக்கிய மரத்தை வெட்டி அகற்றுவதை தவிர வேறு வழியே இல்லை. இது, பெரும் சவாலாக உள்ளது.
l தென்னையை தாக்கும் நோய்களை கண்டறிந்து, கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் கொண்டு சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காமல் உள்ளது.
l நோய் தாக்கி வெட்டி அகற்றப்பட்ட மரங்களுக்கு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மாற்று பயிர் சாகுபடி அல்லது, மாற்று தென்னங்கன்று நடவு செய்ய அரசு உதவ வேண்டும் என்று விவசாயிகளின் வலியுறுத்துகின்றனர்.
l வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், நோய் பாதிப்புகளை தடுத்து, தென்னை விவசாயத்தை பாதுகாக்க விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகள் இல்லை. தேங்காய், கொப்பரை விலை சரிவை தடுக்க, அரசிடம் நீண்ட கால திட்டமிடல் இல்லை.
l மத்திய அரசின் ஆதார விலையை உயர்த்தி, விவசாயிகளிடம் கொப்பரை கொள்முதல் அளவையும் அதிகரிக்க வேண்டும். கொள்முதல் செய்த கொப்பரையில் எண்ணெய் தயாரித்து, ரேஷனில் பாமாயிலுக்கு பதிலாகவும், சத்துணவு திட்டத்திலும் பயன்படுத்த வேண்டும். கொப்பரைக்கு பதிலாக தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். இதெல்லாம், எம்.ஜி.ஆர்., காலத்து திட்டமாக இருந்தாலும், இது பற்றி சிந்திக்க தற்போதைய அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை.
l டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி இருக்கும் நிலையில், கள் இறக்கவும் அனுமதிக்க வேண்டும். நீரா உற்பத்தியை அதிகரிக்கவும், நீராவில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க தொழில்நுட்பங்களை அரசு தருவிக்க வேண்டும்.
l தேங்காயை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்ற, 50 சதவீத மானியத்தில் புதிய வரைவு திட்டம் வேண்டும். இக்கோரிக்கைகளை பல ஆண்டுகளாக விவசாயிகள் முன்வைத்தும், நிறைவேற்ற அரசு அக்கறை காட்டாததால், தென்னை சார்ந்த பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு செல்கிறது.
l ஆனால், தேர்தலுக்கு தேர்தல் தென்னை விவசாயிகளை குளிர்விக்க, அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றனர். தென்னையில் கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என, 2009 தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். கள் இறக்க அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும், என, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உறுதியளித்து பேசினார். ஆனால், கள் அனுமதிக்காக இன்று வரை போராடுகின்றனர்.
l 'நானும் விவசாயி தான்' என, போட்டோ ஷூட் நடத்திய முன்னாள் முதல்வர் பழனிசாமி, 'விவசாயிகளின் தோழன்' என வயலில் இறங்கி போஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் ஆகியோர், தென்னை விவசாயிகளுக்காக எதுவுமே செய்யவில்லை என்கின்றனர் விவசாயிகள்.
l விவசாயிகள் குரலுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால், தென்னை விவசாயம் பாதிப்பது மட்டுமின்றி, மத்திய, மாநில அரசுகளுக்கும் நெருக்கடி ஏற்படும். இது தேர்தலிலும் எதிரொலிக்கும் என்கின்றனர்.
l தென்னை பிரச்னைக்கு தீர்வு காண எந்த கட்சி உத்தரவாதம் கொடுக்கிறதோ, அந்த கட்சிக்கே எங்கள் ஆதரவு என்கின்றனர் விவசாயிகள். யார், என்ன வாக்குறுதி கொடுத்து, விவசாயிகளை காக்க களமிறங்க போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்!

