/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப்பொருளுக்காக திருட்டு பழக்கம் 'டிராக்' மாறுகின்றனர் இளைஞர்கள்
/
போதைப்பொருளுக்காக திருட்டு பழக்கம் 'டிராக்' மாறுகின்றனர் இளைஞர்கள்
போதைப்பொருளுக்காக திருட்டு பழக்கம் 'டிராக்' மாறுகின்றனர் இளைஞர்கள்
போதைப்பொருளுக்காக திருட்டு பழக்கம் 'டிராக்' மாறுகின்றனர் இளைஞர்கள்
ADDED : செப் 27, 2025 11:47 PM
தொண்டாமுத்துார் : சமீபகாலமாக, போதைப்பொருட்கள் வாங்குவதற்கு பணம் திரட்டுவதற்காக, இளைஞர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில், தொழில், கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம் என, அனைத்து துறைகளிலும், சென்னைக்கு அடுத்த நிலையில் கோவை மாவட்டம் உள்ளது.
சமீபகாலமாக, திருட்டு, கொள்ளை, கொலை போன்ற குற்றச்செயல்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. குற்றவாளிகளிடம் விசாரிக்கும்போது, குற்றங்கள் செய்வதற்கான முக்கிய நோக்கமாக, போதைப்பொருள் பயன்பாடு உள்ளது தெரிகிறது.
உதாரணத்துக்கு, தொண்டாமுத்துாரில் தொடர்ந்து நடந்த போர்வெல் மோட்டார் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மூவரும், 19 முதல் 22 வயது உள்ளவர்கள். 19 வயதுடைய ஒரு மாணவன், கல்லுாரியில் முதலாமாண்டு படிப்பதும், போதைப்பழக்கம் இருப்பதும் தெரியவந்தது.
போலீசார் கூறியதாவது:
அபரிமிதமான வளர்ச்சி காரணமாக, வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கோவையில் தங்கி, பணிபுரிகின்றனர். கல்லுாரி மாணவர்களும் தங்கியுள்ளனர்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதானவர்களிடம் விசாரித்தபோது, போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தது. போதைப்பொருட்கள் வாங்க பணம் தேவை என்பதால், திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக, வாக்குமூலம் கொடுத்தனர்.
கஞ்சா, போதைப்பவுடர், போதை ஊசி, ஸ்டாம்ப் போன்ற போதைப்பொருட்களையே, அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான போதைப்பொருட்கள், 2,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு நாளுக்கு, 2,000 ரூபாய் வேண்டுமெனில், எந்த வேலைக்குச் சென்றாலும், இத்தொகை கிடைப்பதில்லை. பணத்தேவைக்காக, மோட்டார், தோட்டங்களில் உள்ள மின்மோட்டார் ஒயர், பூட்டிய வீட்டின் கதவுகளை உடைத்து நகை, பணம் திருடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
போதை காரணமாக, அடிதடி, கொலை போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரில், 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் அதிகமாக உள்ளனர். கல்லுாரி மாணவர்களும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர்.
பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, தொடர்ந்து, போதைப்பொருள் விற்பனையையும் தடுத்து வருகிறோம். போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்ளுக்கு மனநல ஆலோசனை கொடுக்க வேண்டும். தங்களது குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு, போலீசார் கூறினர்.
பெரும்பாலான போதைப்பொருட்கள், 2,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு நாளுக்கு, 2,000 ரூபாய் வேண்டுமெனில், எந்த வேலைக்குச் சென்றாலும் கிடைப்பதில்லை. பணத்தேவைக்காக, மோட்டார், தோட்டங்களில் உள்ள மின்மோட்டார் ஒயர், பூட்டிய வீட்டின் கதவுகளை உடைத்து நகை, பணம் திருடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.