/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடத்தில் மழை மரம் விழுந்து பாதிப்பு
/
பெண்ணாடத்தில் மழை மரம் விழுந்து பாதிப்பு
ADDED : ஆக 29, 2024 11:24 PM

பெண்ணாடம்: பெண்ணாடம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த திடீர் மழையால் சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதித்தது.
பெண்ணாடம் பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியே சென்று வர முடியாமல் அவதிக்குள்ளாகினர். நேற்று மாலை 4:00 மணியளவில் பெண்ணாடம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.
மாலை 6:00 மணியளவில் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ய துவங்கியது. மாலை 6:40 மணி வரை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக சுமைதாங்கி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் உள்ள புங்கமரத்தின் கிளை சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது.
பொது மக்கள் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.