காவிரி -வெள்ளாறு இணைப்பு திட்டம் செயல்படுத்த விவசாயிகள்... எதிர்பார்ப்பு:பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற வாய்ப்பு
காவிரி -வெள்ளாறு இணைப்பு திட்டம் செயல்படுத்த விவசாயிகள்... எதிர்பார்ப்பு:பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற வாய்ப்பு
UPDATED : ஜூலை 22, 2026 04:22 AM
ADDED : ஜூலை 21, 2026 07:40 PM

ஸ்ரீமுஷ்ணம்: காவரி-வெள்ளாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக வெள்ளாறு விளங்குகிறது.
இந்த ஆற்றின் குறுக்கே இரு தடுப்பணைகள் கட்டியதால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. இருப்பினும் இந்த ஆற்றில், மழை அதிக அளவில் பெய்தால் மட்டுமே தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. மேலும் தொழுதுார் அணைக்கட்டு திறக்கப்பட்டால் மட்டுமே ஆற்றில் நீரை காண முடியும். இதனால் ஓராண்டில், 11 மாதங்கள் வறண்டே காணப்படும். ஆனால் இந்த வெள்ளாற்றில் காவிரியில் இருந்து திறந்து விடப்படும் நீரை கொண்டு வந்து சேர்த்தால் கடலுார், விருத்தாசலம், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளில், 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:மழைக்காலங்களில் மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் நீரில் உபரியாக உள்ள, 4 லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் திறந்துவிடப்படுகிறது.
இந்த உபரி நீரை மடை மாற்றி திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி வழியே 65 கி.மீ., தொலைவிற்கு கால்வாய் அமைத்தால், தொழுதுார் அணைக்கட்டிற்கு நீரை கொண்டு வந்து சேர்க்க முடியும். தொழுதுார் அணைக்கட்டில் இருந்து, 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட, வெலிங்டன் நீர்தேக்கத்திற்கு நீரை திருப்பி ஏரியில் தேக்கினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
இதனால் அப்பகுதியைச்சேர்ந்த, 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும். மேலும் வெலிங்டன் ஏரியைச்சுற்றி வறண்டு கிடக்கும் சிறிய அளவிலான, 26 ஏரிகளிலும் நீரை தேக்கி வைக்க முடியும். மேலும் தொழுதுார் அணைக்கட்டில் இருந்து வெள்ளாற்றில், திறந்து விடப்படும் நீர் பொலாந்துறை அணைக்கட்டு வழியாக வாய்க்காலில் திருப்பி விடப்படும் நிலையில் இப்பகுதியில் உள்ள 22 ஏரிகளிலும் நீரை தேக்கி வைக்க முடியும். பொலாந்துறையில் இருந்து பாளையங்கோட்டை பெரிய ஏரி வரை செல்லும் வாய்க்கால்கள் மூலம் நீரை கொண்டு செல்வதால், அப்பகுதியைச்சுற்றியுள்ள, 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும். இதனால் இப்பகுதியில் வெயில் காலங்களில் ஏற்படும் நீர் தட்டுப்பாடு நீங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுஒருபுறம் இருக்க, இன்னொரு மாற்று திட்டத்தையும் சமூக ஆர்வலர்கள் முன் வைக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:
மேட்டூரில் இருந்து வரும் காவிரி நீரை, வாழப்பாடி வழியாக கால்வாய் அமைத்தும், நீரேற்றம் செய்தும், வெள்ளாற்றில் கலக்க செய்வதன் மூலம், வறண்டு கிடக்கும் ஆற்றில் நீரை கொண்டு சேர்க்க முடியும். இதனால் திட்டக்குடி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவர். மேலும் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் சாகுபடிக்கு போதிய அளவு நீர் கிடைக்கும்.
மறைந்த முதல்வர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் இதற்கான முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டு திட்டமிடப்பட்டது. அதற்கு பிறகு பல்வேறு காரணங்களால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போதைய அரசு தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க கொள்கை முடிவு எடுத்துள்ளதால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வெள்ளாற்றில் நீர் வர துவங்கினால், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் காரணமாக குறைந்த நிலத்தடி நீர் மட்டம் உயரும். மாவட்டத்தில் விவசாயம் செழிக்கும்.
இ்வவாறு அவர்கள் கூறினர்.
