/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் குறுவட்டம் பிரிக்கப்படுமா?
/
பெண்ணாடம் குறுவட்டம் பிரிக்கப்படுமா?
ADDED : ஆக 31, 2024 02:49 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் குறுவட்டத்தை இரண்டாக பிரித்து, கூடுதல் வருவாய் ஆய்வாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திட்டக்குடி தாலுகாவில் திட்டக்குடி கிழக்கு, மேற்கு, தொழுதுார், பெண்ணாடம் ஆகிய நான்கு குறுவட்டங்கள் உள்ளன.
திட்டக்குடி கிழக்கு குறுவட்டத்தில் 25; மேற்கு 19; தொழுதுார் 21; பெண்ணாடம் குறுவட்டத்தில் 44 என, மொத்தம் 109 வருவாய் கிராமங்கள் உள்ளன.
மற்ற குறுவட்டங்களை விட இரண்டு மடங்கு அதிக வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பெண்ணாடம் குறுவட்டத்தில் 44 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஒரு வருவாய் ஆய்வாளர் மட்டுமே பணியில் உள்ளார்.
இதனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு, வேளாண் துறை சார்ந்த கணக்கெடுப்பு, வருவாய் கிராமங்களில் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள், கலவரங்கள் உள்ளிட்ட அவசர காலங்களில் ஏற்படும் பிரச்னைகளை நிர்வகிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
நிர்வாக காரணங்களுக்காக பெண்ணாடம் வருவாய் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை இல்லை.
இதனால் பெண்ணாடம் குறுவட்டத்தில் ஏற்படும் பிரச்னைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுவது தொடர்கிறது.
எனவே, பெண்ணாடம் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.