ADDED : ஜூலை 29, 2026 10:14 PM
விருத்தாசலம்: முன்விரோத தகராறில் வேன் டிரைவரை தாக்கிய ரவுடி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் மேல்பாதியை சேர்ந்தவர் சிவஜீவன், 23. டாடா ஏஸ் வேன் டிரைவர். இவருக்கும் காசிநாதன் மகன் தனுஷ் என்பவருக்கும் சமீபத்தில் கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த தனுஷ், தனது நண்பரான மேட்டுக்காலனியை சேர்ந்த ரவுடி மொட்டையன் (எ) அருண்குமாரிடம் தெரிவித்துள்ளார். கடந்த 28ம் தேதி மேற்குகோபுர வீதியில் வேனுக்கு காற்று பிடித்த சிவஜீவனை, அருண்குமார், தனுஷ், நவீன் ஆகியோர் கட்டையால் தாக்கினர். இதில், தலையில் படுகாயடைந்த சிவஜீவன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மேட்டுக்காலனி ராஜேந்திரன் மகன் அருண்குமார், 24, காசிநாதன் மகன் தனுஷ், 23, மாரியம்மன் கோவில் தெரு ரவிச்சந்திரன் மகன் நவீன், 22, ஆகியோரை கைது செய்தனர்.
