UPDATED : ஜூலை 28, 2026 10:25 PM
ADDED : ஜூலை 28, 2026 10:22 PM
கடலுார்: கடலுாரில் தனியார் பஸ் மற்றும் தனியார் கல்லுாரி பஸ் மோதிய விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர். புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி பஸ், மாலை 5:30 மணிக்கு கடலுார்-நெல்லிக்குப்பம் சாலையில் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணித்தனர்.
செம்மண்டலம் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் பஸ்சை டிரைவர் நிறுத்தியதும் சில மாணவிகள் கீழே இறங்கினர்.
அப்போது, பின்னால் 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சீரான வேகத்தில் வந்த மடுகரை செல்லும் தனியார் பஸ், கல்லுாரி பஸ்சின் பின்னால் மோதியது. சத்தம் கேட்டு பயணிகளும், மாணவர்களும் கூச்சலிட்டதால் பரபரப்பு நிலவியது. அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
விபத்தில் தனியார் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமானது. தகவலறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து கடலுார், புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
