/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மார்க்கெட் கமிட்டி அமைக்க நடவடிக்கை தேவை! பெண்ணாடம் விவசாயிகள் கோரிக்கை
/
மார்க்கெட் கமிட்டி அமைக்க நடவடிக்கை தேவை! பெண்ணாடம் விவசாயிகள் கோரிக்கை
மார்க்கெட் கமிட்டி அமைக்க நடவடிக்கை தேவை! பெண்ணாடம் விவசாயிகள் கோரிக்கை
மார்க்கெட் கமிட்டி அமைக்க நடவடிக்கை தேவை! பெண்ணாடம் விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜன 22, 2024 12:48 AM
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் மார்க்கெட் கமிட்டி அமைக்க வேண்டும் என 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இடைத்தரகர்கள் தலையீட்டை தடுக்க முடியும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.
பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள திருமலை அகரம், இறையூர், எடையூர், கோவிலுார், சவுந்திரசோழபுரம், செம்பேரி, கிளிமங்கலம், மோசட்டை, குறுக்கத்தஞ்சேரி, நந்தப்பாடி, வெண்கரும்பூர், முருகன்குடி, துறையூர், சின்னகொசப்பள்ளம், பெரியகொசப்பள்ளம், இருளம்பட்டு, மாளிகைக்கோட்டம், பாசிக்குளம், பெலாந்துறை, கணபதிகுறிச்சி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1 லட்சம் ஏக்கர் பரப்பிலான சாகுபடி நிலங்கள் உள்ளன.
இதில், மோட்டார் பாசனம் மூலம் சம்பா, குறுவை ஆகிய இரு பட்டங்களில் நெல்லும், மானாவாரியில் மக்காசோளம், உளுந்து, வரகு, வேர்க்கடலை, சோளம், கம்பு, எள், கேழ்வரகு மற்றும் பயறு வகைகள் உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
அறுவடை செய்யும் நெல் உட்பட மானாவாரி விளை பொருட்களை விற்க 20 கி.மீ., துாரமுள்ள விருத்தாசலம்; 18 கி.மீ., துாரமுள்ள திட்டக்குடி மார்க்கெட் கமிட்டிகளுக்கு அதிக வாடகைக்கு வாகனங்கள் எடுத்துச்செல்லும் நிலை உள்ளது.
இதனை பயன்படுத்தி நெல் அறுவடை நேரங்களில் சில வியாபாரிகளும், இடைத்தரகர்களும் நேரடியாக நெல் வயல்களுக்கு சென்று விவசாயிகளிடம் நெல்லை குறைந்த விலைக்கு வாங்குகின்றனர்.
அதில், சில வியாபாரிகள் விவசாயிகளிடம் நடவு நேரத்தில் விதை நெல், இடுபொருட்களை வாங்கிக்கொடுத்து, அந்த தொகைக்கு ஏற்ப அறுவடை காலங்களில் வட்டி கணக்கீடு செய்து நெல்லை வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் அதிக செலவு செய்தும் அறுவடை நேரங்களில் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்று விவசாயிகள் ஏமாறுவது வாடிக்கையாக உள்ளது.
எனவே, விவசாயிகளின் நலன்கருதி பெண்ணாடத்தில் மார்க்கெட் கமிட்டி அமைக்க அமைச்சர்கள், கலெக்டர், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.