/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிரதான சாலைகளில் தானியங்கி சிக்னல் அமைப்பு; விருத்தாசலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
/
பிரதான சாலைகளில் தானியங்கி சிக்னல் அமைப்பு; விருத்தாசலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
பிரதான சாலைகளில் தானியங்கி சிக்னல் அமைப்பு; விருத்தாசலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
பிரதான சாலைகளில் தானியங்கி சிக்னல் அமைப்பு; விருத்தாசலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
ADDED : அக் 18, 2025 07:14 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பிரதான சாலைகளில் தானியங்கி சிக்னல் அமைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருத்தாசலம் உட்கோட்ட தலைமையிடமாக இருப்பதால் அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், பெருவணிக நிறுவனங்களுக்கு திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், மந்தாரக்குப்பம், மங்கலம்பேட்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
அதுபோல், கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக பஸ், லாரி, வேன் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் நகரில் போக்குவரத்து பாதிப்பது தொடர்கதையாக உள்ளது.
இதனை தவிர்க்கும் வகையில், விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து மணவாளநல்லுார் ஊராட்சி எல்லை வரை ஒருமுனையிலும்; அரசு பழத்தோட்டம் வழியாக உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலை வரையிலும் இருபுறம் புறவழிச்சாலைகள் உள்ளன.
நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் சார்பில் சாலைகளை விரிவுபடுத்தி, இருபுறம் பிளாட்பார்ம் போடப்பட்டது. இருப்பினும் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமமடைகின்றனர்.
கடந்த பத்து ஆண்டுக ளுக்கு முன் பாலக்கரை, ஜங்ஷன்ரோடு, கடைவீதி நான்குமுனை சந்திப்பு, கடலுார் ரோடு பகுதிகளில் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், வாகனங்களை எச்சரித்து நிறுத்தும் எலக்ட்ரானிக் கடிகாரம் பொறுத்தாமல், பிளிங்கர்ஸ் மட்டுமே பயன்பட்டன.
இதனால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வது தொடர்ந்து. நாளடைவில் திறந்தவெளியில் நின்றிருந்த கம்பங்கள் பயன்பாடின்றி துருபிடித்து பாழாகின. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் முயற்சியால் தற்போது புதிதாக சிக்னல் கம்பங்கள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
அதன்படி, பாலக்கரை, ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம், கடைவீதி நான்குமுனை சந்திப்பு, ஜங்ஷன்ரோடு, எல்.ஐ.சி., அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், தபால் நிலையம் போன்ற பிரதான வாகனங்கள் செல்லும் இடங்களில் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்படுகிறது.
அதில், பாலக்கரை, கடைவீதி பகுதிகளில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் எலக்ட்ரானிக் கடிகாரமும் அமைக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை முடிந்ததும், ஓரிரு வாரத்தில் சிக்னல்கள் அனைத்தும் பயன்பாட்டிற்கு வந்து விடும் என டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
நகரில் வாகன நெரிசலுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு விடிவுகாலம் பிறந்துள்ளதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.