/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழிற்சாலையில் ரசாயன புகை கசிவு கடலுாரில் பரபரப்பு; 100 பேர் 'அட்மிட்'
/
தொழிற்சாலையில் ரசாயன புகை கசிவு கடலுாரில் பரபரப்பு; 100 பேர் 'அட்மிட்'
தொழிற்சாலையில் ரசாயன புகை கசிவு கடலுாரில் பரபரப்பு; 100 பேர் 'அட்மிட்'
தொழிற்சாலையில் ரசாயன புகை கசிவு கடலுாரில் பரபரப்பு; 100 பேர் 'அட்மிட்'
ADDED : செப் 06, 2025 02:38 AM

கடலுார்:கடலுார் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய ரசாயன புகையால் பாதிக்கப்பட்ட, 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
கடலுார் சிப்காட்டில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் கிரிம்சன் என்ற தனியார் தொழிற்சாலையில், நேற்று காலை திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது.
சிறிது நேரத்தில், தொழிற்சாலை பாய்லருக்குள் செல்லும் பைப் லைனில், 'காஸ்கட்' விலகி, குழாயில் இருந்து ரசாயன புகை வெளியானது. அதனால், அப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் புகை மூட்டம் பரவியது.
இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது. சிலர் செய்வதறியாது பதற்றத்தில் விழுந்தனர். ஒரு சிலர் தொழிற்சாலையில் ஆட்கள் நடமாட்டத்தை பார்த்து அங்கு விரைந்தனர்.
பணியில் இருந்த செக்யூரிட்டி, மக்களை உள்ளே விட மறுத்தார். ஊழியர்களிடம் நச்சுப்புகை எப்படி வந்தது என கேட்டு, பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
சிலர் உள்ளே நுழைந்து வரவேற்பறையில் இருந்த பொருட்கள், கண்ணாடிகளை நொறுக்கினர். பின், தொழிற்சாலையில் இருந்து வெளியேறி கடலுார் - சிதம்பரம் சாலை, குடிகாட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பற்ற முறையில் தொழிற்சாலை நடத்துவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காணவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தினர்.
முதுநகர் போலீசார், போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ரசாயன புகை வெளியேறிதால் கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் கடலுார் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எஸ்.பி., ஜெயக்குமார் தொழிற்சாலைக்கு விரைந்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததார்.
தொழிற்சாலை நிர்வாகம், 'குழாயில் இருந்து வெளியானது அதிக அழுத்தத்தால் ஏற்பட்ட நீராவி தான். நச்சுப்புகையில்லை' என, தெரிவித்தது. கடலுார் முதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.