/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விதைப்பு பணி துவங்க முடியாமல் விவசாயிகள்... கவலை; நிலங்களை சமன் செய்து மழைக்காக காத்திருப்பு
/
விதைப்பு பணி துவங்க முடியாமல் விவசாயிகள்... கவலை; நிலங்களை சமன் செய்து மழைக்காக காத்திருப்பு
விதைப்பு பணி துவங்க முடியாமல் விவசாயிகள்... கவலை; நிலங்களை சமன் செய்து மழைக்காக காத்திருப்பு
விதைப்பு பணி துவங்க முடியாமல் விவசாயிகள்... கவலை; நிலங்களை சமன் செய்து மழைக்காக காத்திருப்பு
ADDED : ஜூலை 09, 2025 07:33 AM

பெண்ணாடம்: மானாவாரி பட்ட விதைப்பு பணிக்கு நிலங்களை உழுது சமன் செய்து, பெண்ணாடம், திட்டக்குடி பகுதி விவசாயிகள் மழைக்கு காத்திருக்கின்றனர்.
பெண்ணாடம், திட்டக்குடியை சுற்றி திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், எரப்பாவூர், நந்திமங்கலம், கோவிலுார், எடையூர், பெருமுளை, சிறுமுளை, இ.கீரனுார், நாவலுார், சாத்தநத்தம், வையங்குடி, எரப்பாவூர், சிறுமங்கலம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
இக்கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மழையை நம்பியே மானாவாரி பயிரான சோளம், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு போன்ற சிறுதானியங்கள், துவரை, பாசிப் பயறு, தட்டை பயறு, உளுந்து போன்ற பயறு வகைகள், வேர்க்கடலை, எள், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துப்பயிர்கள், பருத்தி உள்ளிட்ட பயிர்களை ஜூன் மாதம் இறுதியில் துவங்கி ஆகஸ்ட் வரை கோடை மழைக்கு ஏற்றவாறு மானாவாரி பட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம்.
அதன்படி, நடப்பு மானாவாரி பட்டத்திற்கு விவசாயிகள் தங்களின் விளைநிலங்களை வழக்கமாக டிராக்டர் மூலம் உழுது, சமன் செய்து கோடை மழைக்கு காத்திருக்கின்றனர். ஆனால் மழையின்றி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கமே அதிகரித்து வருவதால் விதைப்பு பணிகளை துவங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை, ஜூன், ஜூலை மாதத்தில் தென்மேற்கு பருவமழை, அக்., நவ., மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்ற கணக்கில், காலம் காலமாக மானாவாரி, சம்பா, குறுவை உள்ளிட்ட சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவம் தவறி பெய்யும் மழை உள்ளிட்ட பல காரணங்களால் மானாவாரி பரப்பு குறைந்தும், பெரும்பாலான மானாவாரி நிலங்கள் தரிசாகவும், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் மாறி வருகிறது.
இந்நிலையில், நடப்பு பட்டத்திற்கு (ஜூன் - ஜூலை) தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், இதுவரை போதிய மழை பொழிவு இல்லை. ஆனால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மானாவாரி நிலங்களை சமன்படுத்தி விதைப்பு பணிக்காக காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, வேளாண் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இம்மாதம் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் மக்காச்சோளம், ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் பருத்தி, வரகு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்வார்கள். ஆனால் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களில் ஈரப்பதம் இல்லாததால் மழைக்கு காத்திருக்கும் சூழல் உள்ளது ' என்றார்.