முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பு : பொதுமக்கள் அச்சம்
முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பு : பொதுமக்கள் அச்சம்
ADDED : ஜூலை 09, 2026 04:04 AM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த கண்டமங்கலம் வெட்டுவாய்க்காலில் இளைஞர்கள் மீன்பிடித்தனர். அப்போது 4 அடி நீளம் கொண்ட முதலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த ஊர் மக்கள் ஒன்று கூடி முதலையை பிடித்து, வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இதனை பாதுகாப்பாக எடுத்து சென்று வக்காரமாரி குளத்தில் விட்டனர்.
அணைக்கரை கீழணையில் அதிக அளவில் உள்ள முதலைகள் வெளியேறி, அருகாமையில் உள்ள கிராமங்களில் குளம், குட்டை போன்ற நீரோடைகளில் தஞ்சம் அடைகிறது.
பின்னர் உணவு தேடி ஊருக்குள் புகுந்து ஆடு, கோழி, நாய் போன்றவைகளை பிடித்து உணவாக எடுத்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சங்கொல்லை மீன் குட்டையில் இருந்து முதலை பிடிபட்டது.
இதேபோன்று கடந்த சில மாதங்களில் கருணாகரநல்லுார், நாட்டார்மங்கலம், தொரப்பு, மேலகடம்பூர் போன்ற பல கிராமங்களில் முதலைகள் பிடிக்கப்பட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் பல ஊர்களில் குளம், குட்டைகளில் முதலைகள் உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் கண்டுகொள்வது இல்லை.
குளம், குட்டை போன்ற நீரோடைகளில் கோடைகாலம் தண்ணீர் வற்றி வருவதால், முதலைகள் நடமாட்டம் தரையில் அதிகரித்து வருகிறது.
இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தெருக்களில் நடக்கவே அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் முதலை இருக்கும் ஊர்களை கண்டறிந்து, அவற்றை பிடிக்க வேண்டும்.
அப்போது தான் பொதுமக்கள் தெருக்களில் அச்சம் இல்லாமல் நடக்க முடியும்.
