/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிலம்பத்தில் பதக்கங்களை குவிக்கும் கடலுார் மாணவர்
/
சிலம்பத்தில் பதக்கங்களை குவிக்கும் கடலுார் மாணவர்
ADDED : ஜூன் 04, 2025 09:42 PM

கடலுார்; கடலுார் அடுத்த காரைக்காட்டைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் சுமன், சிலம்பத்தில் பல்வேறு நிலை போட்டிகளில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
கடலுார் அடுத்த காரைக்காட்டைச்சேர்ந்தவர் சிலம்பம் பயிற்சியார் வேல்முருகன். இவரது மகன் சுமன்,20, கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரியில் பி.எஸ்சி.,மூன்றாமாண்டு படிக்கிறார். இவர் தனது தந்தை நடத்தும் குறவஞ்சி சிலம்ப பள்ளியில் 10வயதில் இருந்து சிலம்பம் பயிற்சி பெற்று வருகிறார்.
2023ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடந்த ஏசியன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். 2023 அக்டோபர் கடலுாரில் நடந்த அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் நடத்திய தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2025ல் காஞ்சிபுரத்தில் நடந்த மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்றார். மேலும் மாநில, மாவட்ட அளவிலான பல்வேறு நிலை போட்டிகளில் பங்கேற்று 27 பதக்கங்களை குவித்துள்ளார்.
மாணவரின் தந்தையும், பயிற்சியாளருமான வேல்முருகன் கூறுகையில், நான் கற்றுக்கொண்ட பாரம்பரிய கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக கற்றுக்கொடுத்து வருகிறேன்.
இடவசதி கூட இல்லாத நிலையில் குறவஞ்சி சிலம்பம் சங்க மாவட்ட தலைவர் ராமநாதன், கராத்தே பயிற்சியாளர் ஆறுமுகம் மற்றும் பொதுமக்களின் உறுதுணையுடன் குறுகிய இடத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. போதிய இடவசதியும், திறமையான மாணவர்களுக்கு அங்கீகாரம் அளித்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தமிழக அரசு உதவிபுரிய வேண்டும் என்றார்.