மானிய விலை டீசல் வழங்குவதில் சிக்கல் : மீனவர்கள் வாக்குவாதம்
மானிய விலை டீசல் வழங்குவதில் சிக்கல் : மீனவர்கள் வாக்குவாதம்
ADDED : ஜூன் 21, 2026 12:55 AM
கடலுார்: கடலுார் துறைமுகம் பகுதியில் மீனவர்களுக்கு வழங்கும் மானியவிலை டீசல் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டத்திலுள்ள மீனவ கிராமங்களிலிருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
தற்போது மீன்களின் இனப்பெருக்க காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்லத் துவங்கியுள்ளனர். தற்போது டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக மானிய விலையில் மீனவர்களுக்கு போதிய டீசல் வழங்குவதில் சிக்கல் இருந்தது.
இதனால் மரக்காணம், காரைக்கால் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்குகளில் மீனவர்கள் மானியவிலையில் டீசலை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
இதனால் அதிருப்தியடைந்த மீனவர்கள் நேற்று காலை துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், 'அதிகாரிகளின் திடீர் அறிவிப்பால் போதிய டீசல் பெற நீண்ட துாரம் செல்ல வேண்டியுள்ளது. எங்களுக்கு கடலுார் துறைமுகத்திலேயே போதிய அளவு டீசல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
அதிகாரிகள் தரப்பில், 'டீசல் தட்டுப்பாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அளவை கடலுாரிலேயே வழங்க முடியவில்லை. இதனால் இங்கு இருக்கும் அளவை பெற்றுக்கொண்டு அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் அங்கு சென்று பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். சில தினங்களில் அதுவும் சரிசெய்யப்படும்' என தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
