/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாநகராட்சியுடன் இணையும் கிராமங்கள் 13 ஆக குறைப்பு! ஒன்றியத்திற்கு புதிய கிராமங்கள் உருவாக்க எதிர்பார்ப்பு
/
கடலுார் மாநகராட்சியுடன் இணையும் கிராமங்கள் 13 ஆக குறைப்பு! ஒன்றியத்திற்கு புதிய கிராமங்கள் உருவாக்க எதிர்பார்ப்பு
கடலுார் மாநகராட்சியுடன் இணையும் கிராமங்கள் 13 ஆக குறைப்பு! ஒன்றியத்திற்கு புதிய கிராமங்கள் உருவாக்க எதிர்பார்ப்பு
கடலுார் மாநகராட்சியுடன் இணையும் கிராமங்கள் 13 ஆக குறைப்பு! ஒன்றியத்திற்கு புதிய கிராமங்கள் உருவாக்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 12, 2025 10:27 PM

கடலுார்: கடலுார் மாநகராட்சியுடன் இணையும் கிராமங்கள், 19ல் இருந்து 13ஆக குறைக்கப்பட்டுள்ளதால், குறுகி வரும் ஊராட்சி ஒன்றியத்திற்கு கூடுதலாக புதிதாக கிராமங்கள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடலுார் நகரம், கடந்த 2021ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியின் மக்கள் தொகை, 2 லட்சமாகவும், பரப்பளவு 27.65 சதுர கிலோ மீட்டராகவும் உள்ளது.
பரப்பளவை அதிகரிக்க அருகிலுள்ள பெரிய கங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, குண்டுஉப்பலவாடி, பச்சையாங்குப்பம், குடிகாடு, கடலுார் முதுநகர், கரையேறவிட்ட குப்பம், அரிசி பெரியாங்குப்பம், திருவந்திபுரம், பாதிரிக்குப்பம், தோட்டப்பட்டு, கோண்டூர், நத்தப்பட்டு, மருதாடு, வெள்ளப்பாக்கம், காரைக்காடு மற்றும் செம்மங்குப்பம் ஆகிய, 19 கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த, 2021ம் ஆண்டு, செப்டம்பரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், முதற்கட்டமாக சேடப்பாளையம், காரைக்காடு ஆகிய 2 கிராமங்கள் விலக்கி கொள்ளப்பட்டன. மீதியுள்ள, 17 கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வந்தன. இதற்கிடையே இணையவுள்ள கிராமங்கள் வழிகாட்டி மதிப்பு உயர்த்தி பத்திரப்பதிவு செய்யப்பட்டன.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பலர் மாநகராட்சியுடன் எங்கள் கிராமங்களை இணைக்க வேண்டாம் என போர்க்கொடி துாக்கினர்.
இந்நிலையில் பல கிராமங்களை சுற்றியும் விவசாய நிலங்கள் அதிகளவில் இருப்பதால் மாநகராட்சியுடன் சேர்க்கைக்கு உகந்ததல்ல என முடிவு செய்யப்பட்டது. அதனால் நாணமேடு, உச்சிமேடு, வெள்ளப்பாக்கம், காரைக்காடு, செம்மங்குப்பம் ஆகிய கிராமங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள அரிசிபெரியாங்குப்பம், கரையேறவிட்டக்குப்பம், குடிகாடு, பச்சையாங்குப்பம், திருவந்திபுரம், கடலுார் முதுநகர், குண்டு உப்பலவாடி, கோண்டூர், மருதாடு, நத்தப்பட்டு, பாதிரிக்குப்பம், பெரியகங்கணாங்குப்பம், தோட்டப்பட்டு, ஆகிய 13 கிராமங்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளன.
மாநராட்சியுடன் இணையும் 13 கிராமங்கள் அரசு இதழில் வெளியாகியுள்ளது. இக்கிராமங்களில் மகாத்மா காந்தி நுாறு நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.
தற்போது கடலுார் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில், 51 ஊராட்சிகள் உள்ளன. மீதியுள்ள 38 ஊராட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இந்த ஊராட்சிகளுடன் பல புதிய நகர்கள் உருவாகி இருக்கும் பகுதிகளில் இருந்து புதிய பஞ்சாயத்துகளும், பெரிய வருவாய் கிராமங்களில் 2 கிராமங்கள் அடங்கியுள்ளன.
அதுபோன்று ஒன்றாக இருக்கும் கிராமங்களை 2 ஆக பிரித்துக்கொள்ளலாம் எனவும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அப்போதுதான் ஊராட்சி ஒன்றியங்கள் முறையாக செயல்பட முடியும்.

