/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் தட்டுப்பாடு : மக்கள் ஆர்ப்பாட்டம்
/
குடிநீர் தட்டுப்பாடு : மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 06, 2025 06:29 AM
விருத்தாசலம்: ஆலிச்சிகுடி கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிகுடி ஊராட்சியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்கு 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சமீபத்தில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையின்போது மின்மாற்றி பழுதானதால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு மின்சப்ளை கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இதனால், அப்பகுதி மக்கள் ஒரு மினி குடிநீர் டேங்க் மூலம் குடிநீர் பிடிக்க வேண்டிய நிலை இருப்பதால், போதுமான தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமமடைந்து வந்தனர்.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நேற்று காலை காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, மின்மாற்றியை உடனடியாக சீரமைக்கக் கோரி கோஷமிட்டனர். தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வந்து சமாதானம் செய்தனர்.
பின்னர், மின்வாரிய ஊழியர்கள் வந்து, மின் இணைப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

