/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் துறைமுகத்தில் சரக்கு கப்பல் போக்குவரத்து... துவக்கப்படுமா?: அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் காத்திருப்பு
/
கடலுார் துறைமுகத்தில் சரக்கு கப்பல் போக்குவரத்து... துவக்கப்படுமா?: அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் காத்திருப்பு
கடலுார் துறைமுகத்தில் சரக்கு கப்பல் போக்குவரத்து... துவக்கப்படுமா?: அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் காத்திருப்பு
கடலுார் துறைமுகத்தில் சரக்கு கப்பல் போக்குவரத்து... துவக்கப்படுமா?: அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் காத்திருப்பு
ADDED : ஜன 10, 2026 06:04 AM

கடலுார்: துறைமுகத்தில் சரக்கு கப்பல் வருகை எப்போது துவங்கும் என கடலுார் முதுநகர் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கடலுார் துறைமுகம் வங்காள விரிகுடாவில் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் உப்பனார் (ம) பரவனாறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
ஆசியாவில் உள்ள பழமையான துறைமுகங்களில், கடலுார் துறைமுகமும் ஒன்று. இந்த துறைமுகம் 142 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கரையிலிருந்து ஒரு மைல் துாரத்திலேயே இயற்கையாகவே, 15 மீட்டர் ஆழம் இருப்பதால், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக உள்ளது.
இத்துறைமுகத்தில் இருந்து எல்லா காலங்களிலும் ஏற்றுமதி, இறக்குமதிக்கு உகந்த துறைமுகமாக கருதப்படுகிறது.
நடுக்கடலில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களிலிருந்து சிறுகலங்கள், மிதவைகள் மூலம் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாம்.
கடலுார் துறைமுகத்தில் இருந்து இரும்பு தாது உள்ளிட்ட பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதேப்போல யூரியா, டி.ஏ.பி., போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
இதற்கிடையே தனியார் கடலுார் துறைமுகத்தில் இருந்து ஒரு வகை கேஸ் இறக்குமதி செய்து வந்தது. பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த 2002ம் ஆண்டுக்கு பின் கப்பல் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் கடலுார் துறைமுகத்தில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த, 2018 ம் ஆண்டு மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் சாகர்மாலா திட்டத்தில் கடலுார் துறைமுகத்தை மேம்படுத்த, 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியில் கப்பல் அணையும் தளம், சிமெண்ட் சாலை போன்றவைகள் அமைக்கப்பட்டன. கப்பல்கள் துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கும், அதற்கு தேவையான அடிப்படை வசதிகளும் தயார் செய்யப்ப ட்டு வருகின்றன.
இதற்கிடைடையே மகதி கடலுார் போர்ட் அண்டு மேரிடைம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த துறைமுகத்தை இயக்க முன் வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்பு கையெழுத்தானது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் கப்பல் போக்குவரத்து துவங்கும் என கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து 2 மாதங்கள் கழிந்துவிட்டன. இன்னும் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை. இனி எப்போது சரக்கு கப்பல் போக்குவரத்து துவங்கும் என கடலுார் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவ்வாறு துறைமுகம் செயல்பட துவங்கினால் பலருக்கு மறைமுக வேலை, போக்குவரத்து போன்றவை அபிவிருத்தி அடையும்.

