மார்க்கெட் கமிட்டியில் பூட்டிக்கிடக்கும் மணிலா உடைப்பு ஆலை திறக்கப்படுமா?
மார்க்கெட் கமிட்டியில் பூட்டிக்கிடக்கும் மணிலா உடைப்பு ஆலை திறக்கப்படுமா?
UPDATED : ஜூலை 20, 2026 08:38 PM
ADDED : ஜூலை 20, 2026 08:32 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் பூட்டிக்கிடக்கும் மணிலா பயிர்களை பிரித்தெடுக்கும் ஆலையை திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம், மங்கலம்பேட்டை, பெண்ணாடம், கம்மாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் ஆண்டுதோறும் ஆடி பட்டம், கார்த்திகை பட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் போர்வெல், கிணறு பாசனம் மற்றும் மானாவாரி பயிராக மணிலா சாகுபடி செய்து வருகின்றனர். ஆடி மற்றும் கார்த்திகை பட்டத்தில் அறுவடை செய்யும் மணிலா பயிர்களை விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் விற்பனை செய்வது வருகின்றனர்.
இந்நிலையில், மணிலாவை உடைத்து பயிர்களை பிரித்தெடுக்கும் தனியார் ஆலை ஒன்று மட்டுமே விருத்தாசலத்தில் தற்போது இயங்கி வருகிறது. இதனால், விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு மணிலா பயிர்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன் மங்கலம்பேட்டை, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள மணிலா உடைக்கும் ஆலைக்கு விவசாயிகள் சென்று பயிர்களை பிரித்தெடுக்கும் அவல நிலை உள்ளது.
இந்நிலையில், விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் பல லட்சம் செலவில், விவசாயிகளுக்கு இலவசமாக மணிலா உடைக்கும் ஆலை கட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டு வந்தது. இந்த ஆலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தனியார் ஒருவருக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டது. அதில், விவசாயிகளுக்கு மணிலா பயிர்களை இலவசமாக உடைத்து தர வேண்டும் என ஒப்பந்தம் போட்பட்டது.
ஆனால், ஆலையை கான்ட்ராக்ட் எடுத்த நபர் கடந்த நான்கு ஆண்டுகளாகவே பூட்டி வைத்துள்ளார். இதனால் விவசாயிகள் மணிலா பயிர்களை பிரித்தெடுக்க மங்கலம்பேட்டை, குறிஞ்சிப்பாடிக்கு சென்று பணம் செலுத்தி மணிலா பயிர்களை பிரித்தெடுக்கும் நிலை உள்ளது. மேலும், மக்காச்சோளம், உளுந்து பயிர்களை பிரித்தெடுக்கும் இயந்திரம் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டு பாழாகி வருகிறது.
எனவே, விவசாயிகள் நலன் கருதி, மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் பூட்டிக்கிடக்கும் மணிலா உடைக்கும் ஆலையை விரைவாக திறந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எடைமேடை பயன்பாட்டிற்கு வருமா; கமிட்டி வளாகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் நலன் கருதி, பல லட்சம் செலவு செய்து 50 டன் எடை கொண்ட எடைமேடை அமைக்கப்பட்பட்டது. ஆனால், இதுநாள் வரை எடைமேடை பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக பாழாகி வருகிறது.
கழிவறை வசதி தேவை;
கடலுார், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய வந்து செல்கின்றனர். அதிக அளவில் பெண் விவசாயிகளும் கமிட்டிக்கு வருகின்றனர். இந்நிலையில், கமிட்டி வளாகத்தில் கழிவறை வசதி இல்லாததால், விவசாயிகள் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்கும் அவலம் உள்ளது. எனவே, கழிவறை அமைக்க வேண்டுத்து தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
