ADDED : மார் 11, 2024 07:04 AM
போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, சிவம்பட்டியிலுள்ள பூங்காவனத்தம்மன் கோவிலில் கடந்த, 5 முதல், 13ம் தேதி வரை அம்மன் திருவிழா நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு ஜாகாரம், பூவாடப்பெட்டி, சக்தி கரகம், மொகம் எடுத்து ஆடுதல், ஊர்மக்கள் சார்பில் நடந்தது. நேற்று மாசி மாத அமாவாசையையொட்டி மயானக்கொள்ளை சூரையாடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், 8,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பக்தர்கள் பக்தியுடன் சாட்டை போட்டுக் கொண்டனர். மயானக்கொள்ளையில் தானியங்கள் சுண்டல் மற்றும் எலுமிச்சை, பூக்களை படையல் வைத்து பூஜை செய்தனர். இதை பக்தர்கள் மடியில் ஏந்தி பெற்றுக்கொண்டு வீட்டில் வைத்தால் தீயசக்திகள் அகன்று நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையில் பெற்றுச் சென்றனர். இன்றிரவு வாணவேடிக்கை, கரகாட்டம், நையாண்டி மேளத்துடன் பிள்ளையார், பூங்காவனத்தம்மன் ரத உற்சவம் நடக்க உள்ளது.
