/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி பகுதியில் ஏற்காடு மலைத்தேன் விற்பனை ஜோர்
/
தர்மபுரி பகுதியில் ஏற்காடு மலைத்தேன் விற்பனை ஜோர்
ADDED : ஆக 03, 2011 01:31 AM
தர்மபுரி:தர்மபுரி நகரப்பகுதி மற்றும் கிராம பகுதியில் ஏற்காடு மலைத்தேன்
விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.மருத்துவ பயன்கள் நிறைந்த தேனுக்கான
விற்பனை வரவேற்பு அதிகம் உள்ளது. இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 8,000 டன்
தேன் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தேன் பொருட்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுதி
செய்யப்பட்டு வருகிறது.ஜெர்மன் நாட்டில் ஆண்டுக்கு 90,000 டன் தேனை
இறக்குமதி செய்கின்றனர். தேனுக்கு உள்ள மருத்துவ குணம் காரணமாக இதன்
பயன்பாடு அதிகரித்து இருப்பதோடு, கிராம பகுதியில் நாட்டு வைத்திய முறைக்கு
தேன் அருமருந்தாக பயன்படுகிறது.குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும்
நாட்டு வைத்திய முறை மருந்துகள் அனைத்தும் தேனில் சேர்த்து குழந்தைகளுக்கு
கொடுக்கப்படுகிறது. தேனுக்கு ஏற்பட்டுள்ள விற்பனை வரவேற்பு காரணமாக பலரும்
சந்தையில் தேனை பல்வேறு வகையான பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து
வருகின்றனர்.தேன் விற்பனை சந்தை வரவேற்பால் குறைந்த முதலீட்டில் பலரும்
தேன் வளர்ப்பு பெட்டிகள் வைத்து தேனை உற்பத்தி செய்து விற்பனை
செய்கின்றனர். இருப்பினும் பெட்டி தேன்களை விட மலைப்பகுதியில் உள்ள
மலைத்தேனுக்கு அதிக வரவேற்பு உண்டு.ஏற்காடு வனப்பகுதியில் மலைத்தேன்களை
எடுத்து சேலம் பகுதியை சேர்ந்த பலர் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல
மாவட்டங்களில் விற்பனை செய்து வருகின்றனர். பாட்டில்களில் அடைக்கப்படும்
தேன்களில் ரசாயன பொருட்கள் கலவை காரணமாக அவை சுத்தமான தேன் என்ற நிலையில்
இருந்து மாறுபடுகிறது.
இயற்கையில் வனப்பகுதியில் உள்ள தேனுக்கு நகர மற்றும் கிராம பகுதிகளில் நல்ல
வரவேற்பு உள்ளது. இந்த விற்பனையை குறி வைத்தும் பலர் மலைத்தேனை விற்பனை
செய்கின்றனர். சேலம் பகுதியை சேர்ந்த சிலர் தர்மபுரி பகுதியில் முகாமிட்டு
மலைத்தேன் விற்பனை செய்கின்றனர்.இந்த தேனில் கலப்படம் இருக்காது என்ற
நம்பிக்கையில் மக்கள் இந்த தேனை விரும்பி வாங்கி வருகின்றனர். ஒரு லிட்டர்
தேன் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய பாத்திரங்களில்
மலைத்தேன் ஆடையுடன் விற்பனை செய்வதால், இயற்கை மாறாமல் இருக்கும் என்ற
நம்பிக்கையில் பலரும் தேன் வாங்கி வருகின்றனர்.இது குறித்து சேலத்தை
சேர்ந்த தேன் வியாபாரி மாணிக்கம் கூறுகையில்,''பெட்டி தேனை விட மலைத்தேன்
நல்ல மருத்துவ குணம் உள்ளது. திக்குவாய் குழந்தைகளுக்கு இந்த தேனை
கொடுத்தால், திக்குவாய் தன்மை குறைய வாய்ப்புள்ளது. இதனால், கிராம
பகுதியில் அதிக அளவில் தேனை விரும்பி வாங்கி செல்கின்றனர்,'' என்றார்.