/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அழகாபுரி அணையில் மண் கடத்தல் பகிரங்கம் : "உடந்தை' அதிகாரிகளால் "தொடர்கதை'
/
அழகாபுரி அணையில் மண் கடத்தல் பகிரங்கம் : "உடந்தை' அதிகாரிகளால் "தொடர்கதை'
அழகாபுரி அணையில் மண் கடத்தல் பகிரங்கம் : "உடந்தை' அதிகாரிகளால் "தொடர்கதை'
அழகாபுரி அணையில் மண் கடத்தல் பகிரங்கம் : "உடந்தை' அதிகாரிகளால் "தொடர்கதை'
ADDED : ஜூலை 11, 2011 10:42 PM
குஜிலியம்பாறை : அழகாபுரி குடகனாறு அணையில் இயந்திரங்கள் மூலம், செங்கல் சூளைகளுக்கான செம்மண் பகிரங்கமாக கடத்தப்படுகிறது.
இதனால் அணையின் இயற்கை வளம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. இதற்கு அதிகாரிகளும் துணை போவதால், கடத்தல்காரர்களின் 'சுரண்டல்' அதிகரித்துள்ளது. இந்த அணை 27 அடி கொள்ளளவும், 5 கி.மீ., சுற்றளவும் கொண்டது. பரந்து விரிந்த அணை பகுதியில் மரம் கடத்துதல்; பறவை, மீன் வேட்டையாடுதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கொடி கட்டிப்பறக்கிறது. ஆட்சி மாற்றத்திற்கு பின் மணல் கடத்தல், சற்று ஓய்ந்துள்ள நிலையில், அணையில் செங்கல் சூளைகளுக்கான செம்மண் கடத்தல் பகிரங்கமாக நடக்கிறது.
அணையில் நீர் இருப்பதால் அணை வழி செல்லும், வேடசந்தூர்-அழகாபுரி குறுக்கு ரோட்டில் போக்குவரத்து அறவே இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அணையின் உள் பகுதியில், டெண்டர் எடுத்தவர்களை போல, இயந்திரங்கள் மூலம் செம்மண் வெட்டி எடுக்கின்றனர். இதனால், ஆங்காங்கே பெரும் பள்ளங்களாக உள்ளது. இதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதே நிலை நீடித்தால் அணை முழுவதும் பள்ளங்கள் ஏற்பட்டு பாழ்படும் அபாயம் உள்ளது. மேலும் இங்கு இரை தேடி வரும் பறவைகள் வரத்தும் முழுமையாக நின்று போகும். அணையை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே, மண் கடத்தலுக்கு துணை போகின்றனர். இதுபோன்ற அதிகாரிகளை 'களை' எடுத்து மண் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் மண் கடத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.