/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துார்வாராத சாக்கடைகள்... சீரமைக்கப்படாத பஸ் ஸ்டாண்ட் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 21வது வார்டு
/
துார்வாராத சாக்கடைகள்... சீரமைக்கப்படாத பஸ் ஸ்டாண்ட் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 21வது வார்டு
துார்வாராத சாக்கடைகள்... சீரமைக்கப்படாத பஸ் ஸ்டாண்ட் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 21வது வார்டு
துார்வாராத சாக்கடைகள்... சீரமைக்கப்படாத பஸ் ஸ்டாண்ட் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 21வது வார்டு
ADDED : ஆக 04, 2024 06:27 AM

திண்டுக்கல் : சேதமான ரோடுகள்,மழை நேரத்தில் வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்,துார்வாரப்படாத சாக்கடைகள்,அடிப்படை வசதிகள் இல்லாத பூ மார்க்கெட், நடுரோட்டில் டிரான்ஸ்பார்மர்கள்,குறுகலான தெருக்கள்,எந்நேரமும் கடித்து குதறும் கொசுக்கள் என பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் மாநராட்சி 21 வது வார்டு மக்கள்.
திண்டுக்கல் இ.பி.காலனி,ஸ்பென்சர் காலனி,வடக்கு சவுராஷ்டிராபுரம்,சவுராஷ்டிரா காலனி,ராமசாமி காலனி,ஸ்பென்சர் காம்பவுண்ட் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்தவார்டில் இரவு மட்டுமில்லாமல் பகல் நேரங்களிலும் கடிக்கும் கொசுக்களால் மக்கள் வெளியில் வராமல் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். கொசு மருந்து அடிக்க வேண்டிய மாநகராட்சி செவிசாய்க்காமல் அப்படியே இருக்கின்றனர். தண்ணீர் குழாய் அமைக்க வரும் மாநகராட்சி ஊழியர்கள் ரோடை சேதமாக்குகின்றனர். அதை சீரமைக்காமல் அப்படியே விட்டு செல்வதால் தோண்டப்பட்ட இடங்கள் ஆண்டுக்கணக்கில் சேதமாகவே உள்ளது. இரவில் டூவீலர்களில் வருவோர் தடுமாறுகின்றனர். மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு துணைபோகும் நிலை தொடர்கிறது. இதோடு மட்டுமில்லாமல் மழை பெய்தாலே மழை நீரோடு சேர்ந்து கழிவுநீரும் விருந்தாளிகள் போல் வீட்டிற்குள் புகுந்து மக்களை பாடாய்படுத்துகிறது. பல ஆண்டுகளாக துார்வாராத சாக்கடைகளால் எந்நேரமும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் தொற்றுகள் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நடுரோட்டில் அகற்றபடாமல் நிற்கும் டிரான்ஸ்பார்மரால் வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர். சில நேரங்களில் விபத்துக்களும் அதிகம் நடக்கின்றன. இங்கு நடக்கும் பிரச்னைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் கொடுத்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்ன நடந்தால் நமக்கென்ன என அதிகாரிகள் உள்ளனர். இதில் மக்கள் தான் பாதிக்கின்றனர். பூ மார்க்கெட்டை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைத்தபோதிலும் நடவடிக்கை இல்லை. மாநகராட்சி நிர்வாகம் இங்கு நடக்கும் பிரச்னைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
எலித்தொல்லை
சுந்தரேசன்,தொழிலாளி: சவுராஷ்டிரா காலனி பகுதியில் சாக்கடை ஆண்டுக்கணக்கில் துார்வாராமல் இருப்பதால் கழிவுநீர் செல்லாமல் அப்படியே தேங்குகிறது. மழை பெய்தால் அவ்வளவு தான் மழைநீரோடு சேர்ந்து கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து மக்களுக்கு தொற்று நோயை பரப்புகிறது. அதிகாரிகளுக்கு இதுகுறித்து பல புகார்கள் கொடுத்துள்ளோம். ஆனாலும் நடவடிக்கை எடுத்தாபடில்லை. மக்கள் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் செவிசாய்க்க வேண்டும். எலித்தொல்லைகள் அதிகளவில் உள்ளது.
கழிவுநீர் தேங்குகிறது
செந்தில்நாதன், கடை உரிமையாளர் : தெருக்களில் பல இடங்களில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஜோராக நடக்கிறது. தொடர்ந்து இதேநிலை நீடிப்பதால் கொசுக்கள் அதிகளவில் பரவியுள்ளது. கொசு மருந்து பல மாதங்களாக அடிக்காமல் இருப்பதால் சொல்லவே முடியாத அளவிற்கு கொசுக்கள் தொல்லை உள்ளது. மக்களும் வீட்டில் இருந்தபடி வேதனைப்படுகின்றனர். வாரத்திற்கு இருமுறை கொசு மருந்து அடிக்க வேண்டும்.
ரோடை சீரமைக்க வேண்டும்
ரமணன், தொழிலாளி : வார்டில் பல பகுதிகளில் ரோடுகள் சேதமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். அதிகாரிகளும் இந்த வழியாக தான் செல்கிறார்கள். பிறகு ஏன் சரி செய்யாமல் இருக்கிறார்கள் என தெரியவில்லை. இவ்வழியில் செல்லும் வாகனங்களும் பழுதாகின்றன. பாதிக்கப்படும் மக்களுக்காக சேதமான ரோடுகளை சீரமைக்க வேண்டும். அதிகாரிகள் எங்கள் பகுதிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
ரவிச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர், திண்டுக்கல்: நகருக்குள் பல இடங்களில் புதிதாக ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. சேதமான ரோடுகளை கண்டறிந்து அதுவும் சீரமைக்கப்படும். பஸ் ஸ்டாண்டில் விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.5 கோடியில் பூ மார்க்கெட் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட உள்ளது என்றார்.